Saturday, March 31, 2007

இடஒதுக்கீடு அமல் - 5


முதலில் டிஸ்கி!
க்ரீமி லேயர் வரையறுப்பு, பிற்படுத்தப்பட்டவரில் ஒரு சிறு பிரிவினரே (சில சாதியினரே அதிகமாக) இடஒதுக்கீட்டின் பயனை அனுபவித்து வருவது போன்றவை குறித்து என்னிடம் தீவிரமான கருத்துகள் இருந்தாலும், OBC இடஒதுக்கீடு தேவையற்றது என்ற நிலைப்பாடு என்னிடம் இல்லை. மேலும், இவ்வளவு ஆண்டுகள் இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தும், தாழ்த்தப்பட்டவர் உரிய சமூக நீதி பெற, அது பெரிதாக உதவவில்லை என்பது நிதர்சனம். அது ஏன் என்ற எந்த ஆய்வும் சரியாக செய்யப்படுவதுமில்லை, யார் ஆட்சியில் இருந்தாலும்!

OBC இடஒதுக்கீட்டில் அக்கறை காட்டுபவர்கள், இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏன் உரிய பயனளிக்கவில்லை, அவர்களில் பெரும்பான்மையினர் ஏன் இன்னும் அவல நிலையில் உள்ளனர், ஏன் அவர்கள் இன்னும் தீண்டாமையினால், அநியாய வன்முறைகளால் தாக்கப்படுகின்றனர் என்பவை குறித்து, நியாயமாக காட்ட வேண்டிய அக்கறையையும் காட்டுவதில்லை, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இல்லை! ஏனெனில், OBC போல் தாழ்த்தப்பட்டவர், தேர்தலின்போது ஒரு ஓட்டு வங்கியாக மாறுவதில்லை, இது தான் யதார்த்தம்!

இவ்வளவு ஆண்டுகளில், ஒரு பாப்பாப்பட்டியையும், ஒரு கீரிப்பட்டியையும் தலித் உரிமைக்கான எடுத்துக்காட்டுகளாக காட்டுகிறோம் என்றால், மிக நிச்சயமாக, பதவியில் இருப்பவர்கள் கிள்ளிப் போட்ட துரும்புகள் பயனளிக்கவில்லை தானே! இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும், இட ஒதுக்கீடு குறித்து தெளிவான பார்வை, நோக்கம் என்பது கிடையாது. அவ்வப்பொழுது, ஏதாவது ஸ்டண்ட் அடித்து, சமூக நீதிக் காவலர்கள் என்று காட்டிக் கொள்வது அவசியம். Reservation has clearly become a political game of one-upmanship! எந்த அரசியல்வாதியாவது, என் குடும்பத்தினருக்கோ நெருங்கிய உறவினருக்கோ இட ஒதுக்கீடு வேண்டாம் என்று வெளிப்படையாக கூறிக் கேள்விப்பட்டிருக்கிறோமா???? இதுவும் யதார்த்தம்!

இப்போது சுப்ரீம் கோர்ட் எழுப்பிய வினாக்கள், சந்தேகங்கள் குறித்து: (கோர்ட்டுக்கு சமூக நீதியில் அக்கறை இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அரசுக்கு வேண்டியது, கோர்ட் பிரச்சினையின்றி 27% இடஒதுக்கீடை அமல்படுத்துவது)

1. எதற்காக 1931-ஆம் ஆண்டு பழைய சென்ஸசை வைத்து OBC-க்களை வகைப்படுத்த வேண்டும் ? கோர்ட் இந்த கேள்வியை எழுப்பும் என்று அரசு தரப்புக்குத் தெரியாதா? தடை வந்தால் பரவாயில்லை என்று தெரிந்தே செய்த மாதிரி தோன்றுகிறது! சமூக நீதியில் உண்மையான அக்கறை உள்ள அரசு, லேட்டஸ்ட் சென்ஸஸ் பட்டியலை (இருக்கிறதா என்று தெரியவில்லை) கோர்ட்டில் காட்டியிருக்க வேண்டாமா ? அல்லது (குழலி கூறுவது போல) உயர்கல்வி நிறுவனங்களில் எவ்வளவு இடங்களை (மக்கட்தொகையில் சிறிய சதவிகிதத்தில் உள்ள) உயர்சாதியினர் ஆக்ரமித்துள்ளனர் என்று புள்ளி விவரங்களோடு முதலிலேயே காட்டியிருக்க வேண்டாமா?

2. அது போலவே, கோர்ட் கூறிய, "Reservation cannot be permanent and appear to perpetuate backwardness" என்பதற்கு அரசுத் தரப்பில் பதில் இருந்திருக்க வேண்டும். அதாவது, அடுத்த ஒரு 30 ஆண்டுகள் 27% இடஒதுக்கீடு அமலில் இருக்கும் பட்சத்தில், இந்தந்த அளவில் பிற்படுத்தப்பட்டவர் முன்னேற்றம் ஏற்படும் என்று data தயாரித்திருக்க, அரசுத் தரப்பால் நிச்சயம் முடியும், ஆனால் செய்யவில்லை! அது போலவே, உயர்கல்வி நிறுவனங்களில் (இடங்களைக் கூட்டுவதால்) Infrastructure development குறித்த கருத்துகளை தெளிவாக முன் வைத்திருக்க வேண்டும். ஒரு 30 ஆண்டுகள் கழித்து, 27% இடஒதுக்கீடு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் வாக்கு தருவதில் எதுவும் குடிமுழுகப் போவதில்லை!!!

3. அது போலவே, க்ரீமி லேயரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்காமலேயே, 27%-இல் ஒரு 9% OBC-யில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அளிக்கப்படும் என்று அரசு, க்ரீமி லேயர் விஷயத்தில் middle path எடுத்திருக்கலாம்!

மேற்கூறியவை, நீதிமன்ற விவாதங்களின்போது, அரசு தரப்புக்கு வலு சேர்த்திருக்கும் என்று தோன்றுகிறது. சரியான homework செய்யாமல், இப்போது கூப்பாடு போடுவதில் எந்த பயனும் இல்லை. அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்லும்போது, சரியான data மற்றும் இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான சிந்தனை ஆகியவையோடு சென்றால், சரியான முறையில், இடஒதுக்கீடை அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாகவே தோன்றுகிறது.

இவ்விடயத்தை பற்றிய எனது முந்தைய பதிவுகள்

க்ரீமி லேயர்
இடஒதுக்கீடு அமல்-4
இடஒதுக்கீடு அமல்-3
இடஒதுக்கீடு - உரத்த சிந்தனைகள்


என்றென்றும் அன்புடன்
பாலா

*** 320 ***

319. நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன் (அ) யாருக்காக இது யாருக்காக?

நம்ம முகம் தெரியாத 'கிராமத்து அரட்டை அரசியல் அனானி' நண்பர், கொஞ்ச நாள் பிஸியா இருந்துருப்பார் போல, இன்னிக்கு திடீர்னு மெயிலில் ஒரு மேட்டரை அனுப்பி அதை என் பதிவில் இடுமாறு வேண்டுகோள் வைத்திருந்தார். மேட்டர், 27% இடஒதுக்கீட்டை நிறுத்தி வைக்கும் சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடையை முன்னிறுத்தி நம்ம "திராவிட" இயக்க அரசு அறிவித்திருக்கும் ஒரு நாள் முழு அடைப்பு பற்றி தான்! எப்போதும் Hot Topics குறித்து தான் நம்ம கி.அ.அ.அ. எழுதுவாரு :) இது பத்தியும் அவரது பிரத்யேக 'அரசியல் அரட்டை' ஸ்டைலில் சூப்பரா, இந்த பந்த்-ஐ விளாசியிருக்காரு ;-) புரியரவங்களுக்கு புரிஞ்சா சரி தான்!

ஏற்கனவே, நம்ம 'இட்லிவடை' எல்லாரையும் முந்திக் கொண்டு, இந்த பந்த் பற்றி எழுதிட்டாரு. கி.அ.அ.அ. கொஞ்சம் லேட் தான், இருந்தாலும் லேட்டஸ்ட் :) Better Late than Never !

கருத்துச் சுதந்திரத்தின் மேல் எனக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையாலும், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த நோக்கிலும் கி.அ.அ.அனானியின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் :) தலைப்பு மட்டும் என்னுடையது. மேட்டர் கி.அ.அ. அனானியுடையது !

இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! கி.அ.அ.அ மேட்டர் பதிவாக கீழே ! என்சாய் !
*******************************
இட ஒதுக்கீடும் நாளைய வேலை நிறுத்தமும்
------------------------------------------------------------

"அண்ணே நாளைக்கு வேலைக்கு போக முடியாதாண்ணே" என்றபடி வந்தான் மலையாண்டி

"எலே நம்மளை மாதிரியானவங்களுடைய சமூக நீதி காக்கத்தானடா நாளைக்கு பந்த்...மூதி வேலைக்கு போனா நானே உன்னை கல்லால அடிப்பேன்" என்றார் பேப்பர் படித்துக் கொண்டிருந்த மூக்கையண்ணன்

"இல்லண்ணே...நான் போக மாட்டேன்...வீட்டுல உக்காந்து சன் டீவி பாக்க வேண்டியதுதான்...ஆமா நாளைக்கு சன் டிவி இருக்குமுல்ல"

"டேய் ..அது இல்லாமையா? அதெல்லாம் "அத்தியாவசிய சேவை " நாட்டுக்கும் அவங்க வீட்டுக்கும்...அதுனால அதுக்கெல்லாம் விலக்கு தான்.. நாலு சமூக நீதி படம் போட்டு ..விளம்பரம் மூலம் கலெக்சன் பாத்துர மாட்டாங்க" என்றான் சுப்பிரமணி.

அப்போது அந்த வழியாக வந்த பூக்காரியிடம் மலையாண்டி "பொன்னாத்தா நாளைக்கு பூ வியாபாரத்துக்கு வந்துராத...நாளைக்கு ஸ்டிரைக்கு" என்றான்

"ஏனுங்க நானோ அன்னாடங்காய்ச்சி...என்னை இப்படி சொன்னா எப்படிங்க?" என்றாள் பொன்னாத்தா

"பூவெல்லாம் அத்தியாவசிய தேவையில வராது...அதுனால விக்க முடியாது..ஆமா பாத்துக்க..அது சரி நமக்காகத் தானே போராடுராங்க.. நம்ம சமூக நீதி காக்க நடக்குற பந்துல நாமளே கலந்துக்கலையின்னா எப்படி பொன்னாத்தா" என்றார் விளக்கும் வகையில் மூக்கையண்ணன்

"அப்படிங்களா...இன்னைக்கும் என் பையன் ஸ்கூலுல ரண்டு குடம் வச்சு எங்காளுங்களுக்கு ஒரு பானையிலும் மத்தவங்களுக்கு ஒரு பானையிலும் குடிக்க தண்ணி வக்கிறாங்க! அதைக் கேக்க ஒரு நாதியுமில்லை....இத்தனை வருஷம் ஆட்சில இருந்துக்கிட்டு அதுக்கோசரம் ஒண்ணும் புடுங்கிப் போட முடியலை..இன்னைக்கும் டீக்கடையில செயினுல தொங்குற அலுமினிய கிளாசு இவங்க சமூக நீதியை பார்த்து பல்லிளிக்குது ...வந்துட்டாங்க சமூக நீதியத் தூக்கிகிட்டு" என்று புலம்பியபடி போனாள் பொன்னுத்தாயி

"இந்தப் படிக்காத சனங்களுக்கு ஒரு மண்ணும் புரியறதில்லை" என அலுத்துக் கொண்டார் மூக்கய்யண்ணன்

"இல்லண்ணே...அது சொல்றதுலையும் ஞாயம் இருக்காப்புலதான் தெரியுது...இம்புட்டு ஏன்..நேத்தைக்கு சட்ட சபை பட்ஜட் கூட்டத்துலையே இடது கம்மூனிஸ்ட் கட்சிக்காரரு கோவிந்தராசுன்றவரு சில ஊர்களில் இன்னும் தீண்டாமை உள்ளது, அரசு பள்ளிகளில் ஆதிதிராவிடர்களுக்கு தனிப் பானையிலும் மற்ற மாணவர்களுக்கு தனிப் பானையிலும் குடிநீர் வைக்கப் படுகிறது..இதற்கான பட்டியலை ஆதாரத்துடன் தரத் தயார்! அரசு இதில் தலையிட வேண்டும்" அப்படீன்னு நேத்து பேசியிருக்காரு.....2007 ல் நடக்குற இந்த அக்கிரமத்துக்கு யாருமே வாயைத் தொறக்கலை ஆனா இதே ஆளுங்க 1931-ல எடுத்த சென்சஸ் கணக்கை ஆதாரமா வச்சு எப்படி ஒதுக்கீடு கேக்குறீங்க அப்படீன்னு கோர்ட் கேட்டதை எதுத்து சவுண்டு விடுறது சூப்பர் தமாசாத்தான் இருக்குது..."

அப்போதுதான் அங்கே வந்த சந்திரன் " டேய் அதுதாண்டா தலைவர் ஸ்டயிலு...அல்லாமே ஓட்டு கணக்கு பாத்துதான் செய்வாரு...இப்போ நாளைக்கு யாரை எதுத்து பந்த் பண்ணுறாங்க...மத்திய அரசைஎதுத்தா? அப்படீன்னா அரசுலே அவங்கதான இருக்காங்க... நீதித்துறையை எதுத்தா...நீதித்துறை ஒண்ணும் தனிச்சையா தீர்ப்பு குடுக்கலியே.. இரண்டு பக்கமும் உள்ள வாதங்களின் அடிப்படையில் "இடைக்கால தடை" தான அறிவிச்சிருக்காங்க..அதனை ஏத்துக்க முடியலைனா திரும்பவும் கோர்ட்டுக்குதான் போகணும்..அல்லது தீர்ப்பு குடுத்த நீதிபதிங்களை தூக்கியடிச்சுட்டு நாம நெனைக்கிற "பொறுப்புள்ள" நீதிபதிகளைப் போட்டு கேசை மறுபரிசீலனை பண்ணனும்.ஆனா இவரு அதெல்லாம் செய்யாம வெறும் பந்த் நடத்துவாரு..ஏன்? ஏன்னா எதிரியே இல்லாம வாள் சுத்துரதுல செம கில்லாடியாச்சே..இதுல எவனாவது கலந்துக்கிடலையின்னா அவன் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதி அப்படீன்னு பச்சை குத்தலாம்... அதுனால இதெதுக்குடா நமக்கு கெரகம்...அப்படீன்னு நெனைச்சுக்குட்டு வேற வழியில்லாம பந்துல கலந்துக்கிட்டானுங்கன்னா..பந்த் மாபெரும் வெற்றி..அப்படீன்னு அறிக்கை விட்டுக்கலாம்..போர போக்கைப் பாத்தா இவரே மாநில அரசின் கையாலாகாத்தனத்தினை கண்டித்து போராட்டம் நடத்துனாலும் ஆச்சரியமில்லை" என்றான்

உடனே மாயாண்டி, "தாழ்த்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டுக்கு கோர்ட் தடை எதும் விதிக்கலையே, அவிங்க ஏன் பந்த்ல கலந்துக்கணும்?" என்று கேட்க,

மூக்கையன் உடனே "இவன் "முன்னேறிய" எதிர்க்கட்சிக்காரன்.. இப்படித்தான் பேசுவான்" என்றார்

"ஆரம்பிச்சுட்டாங்கையா...ஆரம்பிச்சுட்டாங்கைய்யா" என்றபடி அங்கிருந்து நகர்ந்தான் சந்திரன்
****************

என்றென்றும் அன்புடன்
பாலா

kuzali's posting
osai chella's posting

*** 319 **

Friday, March 30, 2007

லூஸுத்தனமான WORLD CUP-2007 FORMAT

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில்,  வரையறுக்கப்பட்ட format சரியில்லாததால், பல விதங்களில் பலருக்கும் நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது. இந்த format கால் பந்தாட்ட உலகக் கோப்பையில் பயன்படுத்தப்பட்ட ஒன்று.  அதாவது, ஒவ்வொரு க்ரூப்பிலும் நான்கு அணிகள், ஒவ்வொரு க்ரூப்பிலிருந்தும் 2 அணிகள் தேர்வு பெறுவது என்பது. இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் சுற்றிலேயே வெளியேறியதால், விளம்பரதாரர்களுக்கும், ICCக்கும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும், தொலைக்காட்சி சேனல்களுக்கும் என்று பலருக்கும் பெருத்த நட்டம் !  இதற்குக் காரணம், பார்வையாளர்கள் கணிசமாக குறைந்தது தான்.   இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பெருவாரியான ரசிகர்களின் ஆர்வம் குறைந்து போய் விட்டது என்பது கண்கூடு :(

ரிக்கி பாண்டிங், 'minnows' அணிகளைப் பற்றிக் கூறிய கருத்து மிகவும் சரியான ஒன்று என்பது என் கருத்து இருக்கும் எட்டு பெரிய அணிகளுடன் (Aus, SA, India, Pak, Eng, WI, NZ, SL) compete செய்யும் அளவுக்கு முன்னேற, அவ்வணிகள் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம்!   அயர்லாந்து பாக் அணியை வீழ்த்தியதும், பங்களாதேஷ் இந்தியாவை வீழ்த்தியதும் என்னளவில், Aberrations மட்டுமே !  That particular day was a bad day on the field for India (and Pakistan)!  ஒரு சிறிய அணி (பங்களாதேஷ்) பத்து முறை ஒரு வலிமையான அணியுடன் மோதும் வாய்ப்பு கிடைக்கும்போது, ஒரு முறை வெல்வதில் பெரிய ஆச்சரியமில்லை. அந்த 'ஒரு முறை' உலகக் கோப்பையில் எனும்போது, நமக்கு வலிக்கிறது :(

பங்களாதேஷ் அணி, இந்தியாவில் உள்ள ஒரு நல்ல ரஞ்சி அணியுடன் (மும்பை, மேற்கு வங்கம் ... ) ஒப்பிடத்தக்கது, அவ்வளவே!  நமது மும்பை ரஞ்சி அணி கூட ஒரு முறை மூன்று நாட்களில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியிருக்கிறது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  அயர்லாந்து போன்ற அணிகளை சென்னையிலுள்ள ஒரு நல்ல முதல் டிவிஷன் அணியுடன் ஒப்பிட்டு நோக்கலாம்!  சூப்பர் எட்டு சுற்றில் பங்களாதேஷோ, அயர்லாந்தோ ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாது என்பது என் எண்ணம்,  ஏனெனில், அவர்களின் (பத்து ஆட்டங்களில்) ஒரு முறை வெற்றி என்ற இலக்கு (இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக!) ஏற்கனவே எட்டப்பட்டு விட்டது!   அதே நேரத்தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவாக எதுவும் சொல்ல வரவில்லை, அவர்கள் மிக மோசமாக ஆடித் தோற்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

உலகக் கோப்பை format எப்படியிருந்திருக்க வேண்டும் என்ற எனது கருத்தைச் சொல்கிறேன்.  முதல் சுற்றில், ஒரு அணிக்கு குறைந்தபட்சம், நான்கு ஆட்டங்கள் ஆடக் கிடைக்க வேண்டும்.  மொத்தம் 15 அணிகளை, மூன்று பிரிவுகளாக(A,B,C) வகைபடுத்தி, ஒவ்வொரு பிரிவிலிருந்தும், 2 அணிகளை தேர்வு செய்திருக்க வேண்டும்.  மொத்தம் எட்டு வலிமையான அணிகள் (Aus, SA, India, Pak, Eng, WI, NZ, SL) இருப்பதால், ஒரு பிரிவில (A) 3 வலிமையான அணிகளும், அடுத்த பிரிவில் (B) 3 வலிமையான அணிகளும், இறுதிப்பிரிவில் (C) 2 வலிமையான அணிகள் மட்டுமே இருக்கும் சாத்தியம் இருப்பதால், C பிரிவில், பங்களாதேஷ், கென்யா, ஜிம்பாப்வே என்று (வலிமை குறைந்த அணிகளில்) இருப்பதிலேயே சற்று திறமையான 3 அணிகளையும் சேர்க்க வேண்டும்!

உதாரணமாக,
A பிரிவு - India, England, WI, Ireland, Canada என்றும்
B பிரிவு - South Africa, NZ, Srilanka, Scotland, Holland என்றும்
C பிரிவு - Australia, Pakistan, Bangladesh, Kenya, Zimbabwe என்றும்
வகைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

அடுத்த சுற்று, சூப்பர் ஆறு (super six) அணிகளுக்கானது. இந்த சுற்றில், ஒவ்வொரு அணிக்கும் தலா 4 ஆட்டங்கள் கிடைக்கும். முதல் சுற்றில் எதிர்த்து ஆடிய அணியுடன் மறுபடியும் ஆட வேண்டியதில்லை.

ஆறு அணிகளில், முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். அப்புறம், இறுதிச்சுற்று.

இந்த format-இல், மொத்தம் 45 ஆட்டங்கள் (முதல் சுற்றில் 30 ஆட்டங்கள், சூப்பர் ஆறில் 12 ஆட்டங்கள், 2 அரையிறுதி ஆட்டங்கள், 1 இறுதியாட்டம்) நடைபெறும்.  இந்த format-இல், முதல் சுற்றில், பெரும்பான்மையான ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருக்கும், முதல் சுற்று அதிர்ச்சி வெளியேற்றங்களும் இருக்காது!!!  அடுத்த உலகக் கோப்பையிலாவது, format விஷயத்தில், ICC விழித்துக் கொள்ளும் என்று நம்புகிறேன் :)

எ.அ.பாலா

*** 318 ***

Thursday, March 29, 2007

27 சதவீத இடஒதுக்கீட்டு : சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

புதுடில்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிற்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து, "IIMS' டாக்டர்கள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. ஏற்கனவே இட ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடந்து வரும் நலையில், 2007&08 கல்வி ஆண்டு முதல் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அர்பூத் பசாயத், எல்.எஸ்.பாண்டா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் விசாரித்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில், "இட ஒதுக்கீடு வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். குறைந்தபட்சம் அடுத்த 2008&09 கல்வி ஆண்டு வரையாவது இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இந்நலையில் , இன்று மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிற்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நன்றி: தினமலர்

பி.கு: அடுத்த விசாரணை வரும் ஆகஸ்ட் மாதம் என்று தெரிய வந்துள்ளது.

நீதிமன்றம் கூறியவை:

1. 1931 census-ஐ வைத்து, இடஒதுக்கீடு தர வேண்டி, OBC என்ற பிரிவை வகைப்படுத்துவது சரியாகாது.

2. தாழ்த்தப்பட்டவரின் (SC/ST) இடஒதுக்கீடு இடைக்காலத் தடையால் பாதிக்கப்பட மாட்டாது.

3. Reservation cannot be permanent and appear to perpetuate backwardness

4. The state was empowered to enact an affirmative Act to help the backward classes but this action could not be unduly adverse to those who were left out.

5. எந்தெந்த பிரிவினர் சமூக மற்றும் பொருளாதார அளவிலே பின் தங்கியவர்கள் என்று வரையறுப்பதற்குத் தேவையான / அவசியமான data-வை சேகரிப்பதற்கு முன்னதாகவே, இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசு எடுத்த முடிவு சரியானதா என்ற கேள்வி எழுப்பியது.

Also see: சற்றுமுன்: 27 இடஒதுக்கீடுக்கு இடைக்காலத் தடை

*** 317 ***

Saturday, March 24, 2007

சூப்பர் எட்டுக்கு India டாட்டா காமிச்சாச்சு!

இலங்கை முதலில் பேட் செய்து 254 ரன்கள் எடுத்தபோதே, இந்தியா ஜெயிப்பது கடினம் என்று தோன்றியது. அதனால், எனது இந்தப் பதிவில் இப்படி ஒரு கமெண்ட் போட்டிருந்தேன்!

IND vs SL at WC 2007
********************

India won the toss and put SL into bat. SL scored 254/6 in 50 overs. At one stage, SL were 133/4 and India lost the initiative to keep SL total around the 230 mark. That would have been manageable / chaseable, I think !

Anyway, Let us wish the Indian Team well and pray for a famous Indian victory :) Only on 3 previous occasions, WI (twice) and Pakistan have chased more than 250 runs and won on this very ground !!!

ஆனாலும், கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. (பாழாப்போன கிரிக்கெட்டைப் பார்த்தும், உருப்படாத நம்ம பயங்களை நம்பியும் எத்தனை வருடங்கள் ஓட்டியிருகேன், ஸாரி, வேஸ்ட் பண்ணியிருக்கேன் :)) நானே, ஒரு ஸ்கோர் ஷீட் தயார் பண்ணி, அதை fillup செய்ய ஆரம்பித்தேன்! (இதெல்லாம் ஒரு செண்டிமெண்ட்ங்க, 29 ஓவர்கள் வரைக்கும் ஆட்டத்தைப் பார்த்துட்டு, ஸ்கோர் 112/6 என்றவுடன், டிவி switch-off!) சச்சினே பிரஷரை கையாள முடியாதபோது, யுவராஜையும், தோனியையும் குற்றம் சொல்லி என்ன பயன், சொல்லுங்க ? முரளி என்ற சூப்பர் ஸ்பின்னரை எதிர்த்து ஆடுவது அவர்களுக்கு அவ்வளவு எளிதான விஷயமல்ல.

சரி, 44-3 என்ற ஸ்கோரிலிருந்து, 99 வரைக்கும் டிராவிட்டும் சேவாக்கும் எடுத்து வந்தபோது, சரி, ஒரு tight finish-க்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இப்போதும் கூறுகிறேன், சேவாக் கடைசி வரை நின்றிருந்தால், இந்தியா வென்றிருக்கும் என்று திடமாகக் கூறுவேன். அவர் ஒரு proven match winner என்று முன்னமே கூறியிருக்கிறேன்! இந்திய அணியில், அவரும் யுவராஜும் மட்டுமே பிரஷரை கையாளக் கூடியவர்கள் என்பது என் கருத்து! சேவாகையும், தோனியையும் முரளி வீழ்த்தினார், யுவராஜ் அனாவசியமாக ரன் அவுட் ஆனார்.

கங்குலியும், சச்சினும் விக்கெட் இழந்ததற்குக் காரணம், பிரஷரே என்பது என் எண்ணம்!!! உத்தப்பா வாஸ் போட்ட பந்தை வேகமாக அடித்த அடி, வாஸின் முட்டி பெயர்ந்திருக்க வேண்டியது, அவர் அதிர்ஷ்டம், பந்து கையில் ஒட்டிக் கொள்ள, உத்தப்பா caught and bowled!

இனிமேல், இந்திய கிரிக்கெட்டைப் பற்றி பதிவு போட்டால், என்னை செருப்பால், ஸாரி, பிய்ந்த செருப்பால் அடிக்கவும்!!! ஒரு வேளை பெர்முடா அபாரமாக ஆடி பங்களாதேஷை வீழ்த்தினால், சூப்பர் எட்டு சுற்றுக்குச் செல்ல நமக்கு இன்னும் வாய்ப்புள்ளது (எ.அ.பாலா, நீ திருந்தவே மாட்டியாடா? ;-))

தொடர்புடைய சுட்டி: உலகக்கோப்பை இந்தியாவுக்குத் தான்

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 316 ***

Friday, March 23, 2007

நான் கொஞ்சம் 'ஒரு மாதிரி'

'சமீபத்த்தில்' புகழ் டோண்டு ராகவன், எனக்கு அவரது இந்தப் பதிவு வாயிலாக விடுத்த அழைப்பை ஏற்று, நான் கருதும் எனது 'ஒரு மாதிரி' டைப் குணாதிசயங்களை பட்டியலிடுகிறேன் ! இவை ஒரு மாதிரி தானா அல்லது சாதாரணமாக பலரிடமும் காணப்படும் இயல்புகள் தானா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் ! Over to 'ஒரு மாதிரி' குணங்கள் :)

1. பிறருக்கு ஒன்றை பல முறை தெளிவுபடுத்தும் இயல்புடையவன் நான். காரணம், பல சமயங்களில் நான் சொல்லும் விதத்தில் அல்லது அவர்களின் புரிந்து கொள்ளும் திறனில் குறையோ என்ற எனது விடாத சந்தேகம் :)

2. "எதையும் ஒரு முறை" (சுஜாதாவின் நாவல் ஒன்று இத்தலைப்பில் உண்டு!) செய்து பார்க்கும் ஆர்வம், சிறு வயதில் அதிகம். ஒரு சமயம், மின்சாரப் பிளக்கை முழுதுமாகப் பொருத்தாமல், 'ஷாக்' என்பது எப்படி இருக்கும் என்று அதை விரலால் தொட்டுப் பார்த்த அனுபவம் உண்டு.

3. என்னுடன் பழகியவர் மனம் கோணாமல் நடக்க அதீத (தேவைக்கதிகமாக) முயற்சிகள் எடுப்பது ! பள்ளிக் காலத்தில், ஆசிரியர்களிடம் நற்பெயர் எடுக்க பெருமுயற்சி மேற்கொண்டது நினைவுக்கு வருகிறது :) அதனால், சுற்றியிருப்பவர் என்ன நினைப்பார் என்ற எச்சரிக்கை உணர்வு சற்று தூக்கலாக இருக்கும்! அது இப்போது குறைந்து வருகிறது. நமக்காக (பெருமளவு) வாழ்வோம் என்ற மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

4. ஏதோ ஒரு வேண்டாத காரணத்தால் ஏற்பட்ட சண்டை/விவாதத்தை நிறுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டே, (ஒரு வியாதி போல!) அதைத் தொடர்வது :) அதனால் சிக்கல் அதிகரித்து, தேவையில்லாமல் மூட் அவுட் ஆவது !!!

5. மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விடுவது, அதாவது, at times, I am brutally frank. This has both good and bad effects! 3வது குணமும், 5வது குணமும் எதிர்மறையாக முட்டிக் கொள்வதை கவனிக்கவும் :)

6. Trace of pessimism: மேற்கொண்ட/செய்யும் ஒரு காரியம்/செயல் தோல்வியடைவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகம் ஆராய்தல், கவலை கொள்ளல். தற்போது, என்னை மாற்றிக் கொள்ள முயற்சித்து வருகிறேன்.

7. மேற்கூறியது போலவே, ஒரு காரியத்தை செய்ய தலைப்படும்போது, அதை எப்படி நல்லவிதமாக முடிக்கலாம் என்று ஓயாமல் யோசித்துக் கொண்டிருப்பது! Again, this quality has both good and bad effects!

8. புறத்தோற்றத்தில் அதீத அக்கறையின்மை! (மனைவி பலமுறை சொல்லிப் பார்த்து விட்டு விட்டார் :) இது எனது பாட்டனாரிடமிருந்து கிடைத்த 2வது சொத்து, முதல் சொத்து, ஓரளவு ஆங்கிலப்புலமை! நமது பேச்சு நடவடிக்கைகளின் மூலம் பிறர் நம்மை மதிக்க/ஏற்க வேண்டுமேயன்றி, நம் லுக்கை வைத்து அல்ல என்ற திடமான அபிப்பிராயம் இதற்குக் காரணமாக இருக்கலாம் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 315 ***

Thursday, March 22, 2007

314. சூப்பர் எட்டு சுற்றை இந்தியா அடையுமா ?

நேற்றே இது குறித்து எழுதவேண்டும் என்று நினைத்து ஒத்திப் போட்டேன்.  நேற்று இருந்த சூழலில், இந்தியா சூப்பர் எட்டு சுற்றை அடைய இரண்டு விஷயங்கள் முக்கியமானதாக இருந்தன.  (இந்தியா இலங்கையை வென்றால் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதையும், பங்களாதேஷ் நிச்சயம் பெர்முடாவை வெல்லும் என்பதையும் assumption ஆகக் கொள்கிறேன்!)

1. இலங்கை பங்களாதேஷை வென்றால், பெரிய அளவு ரன்கள்
வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் அல்லது
2. பங்களாதேஷ் மற்றுமொரு upset செய்ய வேண்டும், இலங்கையை
வீழ்த்தி !

மேற்கூறிய இரண்டில் ஒன்று நடந்தால் இந்தியாவுக்கு நல்லது என்று கூறுவதற்குக் காரணம், NRR எனப்படும் நெட் ரன் ரேட், அந்த சூழலில் முக்கியத்துவம் இழந்து விடும் !  நினைத்தது போலவே, நேற்று இலங்கை 198 ரன் வித்தியாசத்தில் பங்களாதேஷை வென்றது, இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்து விட்டது.  இப்போது நாம், இலங்கையை NRR பற்றிய கவலையில்லாமல், ஜெயித்தால் மட்டும் போதுமானது !

ஆனால், நேற்று மேட்சின் மூலம், ஜெயசூர்யா (சதம் அடித்து!) ஃபார்முக்கு வந்து விட்டது தான், வயிற்றில் புளியைக்கரைக்கிறது. 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்றெல்லாம், டிராமடிக்காக, மணிகண்டன் போல் சொல்ல முடியவில்லை ;-)

தற்போதைய NRR நிலைமை கீழே:
இந்தியா = +2.507
இலங்கை = +4.5937
பங்களாதேஷ் = -2.002 (-0.14, நேற்றைய இலங்கைக்கு எதிரான
படுதோல்விக்கு முன்!)

சாத்தியங்கள்:

1. இந்தியா-இலங்கை ஆட்டத்தில், இலங்கை 250 ரன்கள் எடுத்து, இந்தியா அந்த இலக்கை, தனது 50-வது ஓவரின் கடைசிப் பந்தில் எட்டுமானால், இந்தியாவின் NRR +1.673 ஆகவும், இலங்கையின் NRR 3.014 ஆகவும் இருக்கும். 

<b>இந்த சூழலில், இந்தியாவை விட அதிக NRR பெற்று, சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேற, கற்பனைக்கெட்டாத ஒரு பெரு வெற்றியை, பெர்முடாவுக்கு எதிரான ஆட்டத்தில், பங்களாதேஷ் பெறவேண்டும் !!!</b>

அதாவது, பங்களாதேஷ் முதலில் பேட் செய்து 500 ரன்கள் எடுத்தால், பெர்முடாவை 67 ரன்களில் வீழ்த்தியோ அல்லது 450 ரன்கள் எடுத்தால், பெர்முடாவை 16(!) ரன்களில் வீழ்த்தியோ வெற்றி பெற வேண்டும் ! நடக்கிற காரியம் போல் தோன்றவில்லை :)

2. பெர்முடா முதலில் பேட் செய்யும் பட்சத்தில், பெர்முடா 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாலும், அந்த இலக்கை பங்களாதேஷ் முதல் ஓவரிலேயே அடைந்தாலும், இந்தியாவின் NRR-ஐ மிஞ்ச முடியாது :)

ஆகவே, நண்பர்களே !  இந்தியா NRR குறித்த கவலையில்லாமல், வெற்றி என்ற ஒரே குறிக்கோளோடு நாளை களமிறங்கி, இலங்கையை வீழ்த்தினால் போதுமானது.  இந்த (ஓரளவு) இணக்கமான சூழல் உருவாக, இலங்கையே நமக்கு உதவி செய்துள்ளது !  இந்த வாய்ப்பை நழுவ விடாமல், இலங்கையை வென்று, அடுத்த சுற்றுக்கு இந்தியா முன்னேற வேண்டும் இல்லையா ?

3. இந்தியா இலங்கையிடம் தோற்றாலும், அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், பங்களாதேஷ் பெர்முடாவிடம் தோற்க வேண்டும் ! இது நடக்கிற காரியமாகத் தெரியவில்லை, பெர்முடாக்காரர்கள், சென்னை லீகில் (league) விளையாடும் 2-வது டிவிஷன் அணியைக் கூட வெல்லுவார்களா என்பது மிகுந்த சந்தேகத்திற்குரியது ;-)

4. இறுதியாக, இந்தியா-இலங்கை மற்றும் பங்களாதேஷ்-பெர்முடா என்று இரண்டு ஆட்டங்களின் போதும் மழை பெய்து, அனைவரும் தலா ஒரு புள்ளி பெற வேண்டும் !!!  இந்தியா, அதிக NRR என்ற வகையில், சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறும் :)

பங்களாதேஷிடம் (அனாவசியமாக) தோற்று, நம்மையெல்லாம் டென்ஷன் பண்ணதோடு இல்லாம, எப்படியெல்லாம் நம்மை யோசிக்க வச்சு சுத்த உடறாங்க பாத்தீங்களா, நம்ம டீம் இந்தியா பசங்க ??? :)  ஏதோ, நாளைக்கு ஜெயிச்சு, அடுத்த ரவுண்டுக்குப் போனா சந்தோஷம் தான் ! 
 
இந்திய அணியைத் திட்டினாலும், நம்ம பயங்க ஜெயிக்கணும்னு தீவிரமா வேண்டிக்கினு தான் இருக்கேன், நீங்களும் 'இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று கூறுவதில்லை' !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 314 ***

Sunday, March 18, 2007

313. இப்படை வென்றால் கிரிக்கெட்டுக்கு அவமானம்!

நேற்று நடந்த இந்தியா-பங்களாதேஷ் ஆட்டத்தை வைத்துத் தான் இந்த தலைப்பு வைத்தேன்! தோற்பதும், வெல்வதும் விளையாட்டில் சகஜம் என்றாலும், தோல்வியைத் தழுவும் விதம் கூட கௌரவமாக இருத்தல் அவசியம். The manner in which our star-studded (actually, this is a sponsor created status 'star' status!) team lost to a lowly Bangaladesh side is mortifying, to say the least, to our national spirit :(

புதிதாக அமைக்கப்பட்ட ஆடுகளத்தில், எதிரணியை ஆட வைப்பது பொதுவாக கடைபிடிக்கப்படும் ஒன்று. இதனால், ரிஸ்க்கைக் குறைக்கலாம்! ஆனால், டாஸ் வென்ற திருவாளர் கேப்டன் திராவிட், முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது, பின்னெரி (backfire!) விளைவை ஏற்படுத்தியது. சேவாக்கை உலகக் கோப்பைக்கு கூட்டிச் சென்றதே தவறு என்று நான் கூற மாட்டேன்! அவர் ஒரு proven match winner! ஆனால், முதல் ஆட்டத்திலேயே, அவரை துவக்க ஆட்டக்காரராக இறக்கி, அவர் ஆட்டமிழந்து, அதனால், எதிரணியின் கை ஓங்கியதை தவிர்த்திருக்கலாம். சேவாக்கை மிடில் ஆர்டரில் இறக்கி, இழந்த நம்பிக்கையையும், ·பார்மையும் அவர் திரும்பப் பெற வாய்ப்பளித்திருக்க வேண்டும்!

நான் எழுத நினைத்த வேறு சில விஷயங்களை, மனிகண்டன் ஏற்கனவே எழுதி விட்டார். எது எப்படியிருப்பினும், இது ஒரு மிகக் கேவலமான தோல்வி!!! டிராவிட்டும் இத்தோல்வியை 'worst defeat' என்று தான் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். எனவே, 'டிராவிட்' என்ற பெயருடன் அவர் இருப்பதால் தான், அவரைப் பற்றி எதிர்மறை விமர்சனம் செய்கிறேன் என்று 'திராவிடத் தமிழர்கள்' சண்டைக்கு வர வேண்டாம் ;-)

ஒரு கட்டத்தில், 4 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுக்களை இழந்த ஒரு அணி வெற்றி பெறுவதற்கு தகுதியற்றதாகி விடுகிறது!!! இந்தியா இன்னும் ஒரு நாற்பது ரன்கள் எடுத்திருந்தால், நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும், அதாவது, பந்து வீச்சாளர்கள் முதலிலிருந்தே நம்பிக்கையுடன் பந்து வீசியிருப்பார்கள் என்பதை வைத்தே இதைச் சொல்கிறேன்! பங்களாதேஷ் பேட்ஸ்மன்களும் இறங்கி அடிக்க யோசித்திருப்பார்கள் இல்லையா?

அடுத்து, பங்களாதேஷ் 192 என்ற இலக்குடன் களமிறங்கியபோதாவது, டிராவிட் சற்று மூளையை உபயோகித்திருக்கலாம்! நம்மிடம், 'brain'-ம் இல்லை, அயர்லாந்துக்கு வாய்த்தது போல் ஒரு Neil-O-Brein-ம் இல்லை! (பாகிஸ்தானியரை நேற்று வூட்டுக்கு அனுப்பிய அயர்லாந்து அணியின் உண்மையான நட்சத்திர ஆட்டக்காரரான இவர், மொத்த 132 ரன்களில் 72 ரன்கள் எடுத்தார்!) சற்றுக் குறைவான total-ஐ defend செய்யும்போது, பந்து வீச்சில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்து, பேட்ஸ்மன் செட்டில் ஆக விடாமல் செய்ய வேண்டும். முக்கியமாக, சச்சினையும், சேவாக்கையும் சற்று முன்னரே பந்து வீச அழைத்திருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

எனக்கென்னவோ, பங்களாதேஷ் பந்து வீச்சை சமாளிக்கவே இப்படித் திணறும் நாம், இலங்கைக்கு (முரளி, ஜெயசூரியா, வாஸ்) எதிராக என்னத்த கிழிக்கப் போகிறோம் என்று புரியவில்லை. அதனால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் குறைவாகவே உள்ளது! அப்படியே நாம் கஷ்டப்பட்டு வென்றாலும், நமது சராசரி ரன்ரேட்டும், நாம் அடுத்த சுற்றுக்குச் செல்ல முக்கியமாகிறது! இந்தியா இப்படிச் செய்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம் என்று நாமெல்லாம் (retrospectively) விமர்சனம் செய்வது சரியா என்ற கேள்வி தொக்கி நிற்பினும், நாம் கூறும் சில சாதாரண விஷயங்கள் கூட ஒரு தேசிய அணியின் கேப்டனும் அணி மேனேஜ்மெண்ட்டும் யோசிக்க மாட்டார்களா என்றெண்ணும்போது அயற்சியாகவே உள்ளது!!!

இறுதியாக, பாக் தோல்வியைப் பற்றி சில எண்ணங்கள். 1992-இல் உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு முதல் சுற்று ஆட்டத்தில், 70 சொச்ச ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை வந்து அவ்வணியைக் காத்து அரை இறுதி சுற்றுக்குச் செல்ல உதவியது. அந்த ஆட்டத்தில் தோற்றிருந்தால், பாகிஸ்தான் அணி போட்டியை விட்டு வெளியேறியிருக்கும்! அப்புறம் நடந்தது வரலாறு! அந்த சரித்திரம் நேற்று ஏடாகூடாமாகத் திரும்பியது!!!

அதே மழை, நேற்று நடந்த பாக்-அயர்லாந்து ஆட்டத்தின்போது, பாகிஸ்தானுக்கு பாதகமாக அமைந்து விட்டது. 132 என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து, 81-4 என்ற நிலையில் இருந்தபோது, மழை பெய்யத் தொடங்கியது. அதன்பிறது, மேட்ச் நடைபெறாமல் போயிருந்தால் கூட, டக்வொர்த்-லூயி முறைப்படி, அயர்லாந்து வென்றிருக்கும்! அயர்லாந்துக்காரர்கள் அப்போதே குதிக்க ஆரம்பித்து விட்டார்கள்! என்ன மேட்டர் என்றால், அந்த கட்டத்தில், ஆட்டத்தின் டெம்போ பாகிஸ்தானுக்கு எதிராகத் திரும்ப, வருண பகவான் காரணமானார் :)

மழை நின்று, ஆட்டம் மீண்டும் நடந்து, அயர்லாந்து, நிர்ணயிக்கப்பட்ட புது வெற்றி இலக்கை அடைந்தது என்பது வேறு விஷயம்! This is perhaps the greatest UPSET in ODI history, according to me! (Better than Zimbabwe beating Australia way back in 1983, when WE won the World Cup!) உண்மையைக் கூறப் போனால், பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்குத் தகுதியிழந்து, இப்படி அவமானத்துடன் வீடு திரும்புவதில் எனக்கு துளியும் மகிழ்ச்சி கிடையாது! மேலும், பாகிஸ்தான் தகுதி பெறாத நிலையில், இந்தியாவும் (துரதிருஷ்டவசமாக!) சூப்பர் எட்டு சுற்றுக்குத் தகுதி பெறாவிட்டால், உலகக் கோப்பை கிரிக்கெட், மிக நிச்சயமாக, ஜொலிப்பையும், பார்வையாளர்களையும், அதனால் விளம்பரத்தையும் இழந்து விடும் என்பது நிதர்சனம் :(

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 313 ***

Friday, March 16, 2007

Warning ! Hazardous material - 2

முந்தைய இந்த பதிவை இட்டதால், பெண் பதிவர்கள் (சிலர்!) என் மேல் சற்று கடுப்பாகி இருக்கக் கூடும் ! அவர்களின் கோபத்தையும், வாட்டத்தையும் போக்க, என் கற்பனை வளத்தை(!) கொண்டு, சிரமப்பட்டு யோசித்து, ஒரிஜினல் படத்தில் கொஞ்சம் ஜிகினா வேலை செய்து, இதை பிரசுரிக்கிறேன் ;-) என்சாய் :-)

இந்த புது 'data sheet' காப்பிரைட் உரிமை பெற்றது ! இதை சுட்டு பயன்படுத்தினால், கேஸ் போடுவேன் :)

புது Data sheet
Photo Sharing and Video Hosting at Photobucket

ஒரிஜினல் Data sheet
Photobucket - Video and Image Hosting

என்றென்றும அன்புடன்
பாலா

*** 312 ***

311. சீன கைக்கூலிகளின் கொலை வெறியாட்டம்

மாவோவின் சித்தாந்தத்தை கடைபிடிப்பதாகக் கூறும் நக்ஸல்பாரிகள் நேற்று அதிகாலை 2 மணி அளவில், (சட்டிஸ்கர் ரேஞ்ச்) பீஜாப்பூர் போலீஸ் போஸ்ட் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி, 54 காவலரை வேட்டையாடி விட்டு, இடத்தையும் எரித்து விட்டு, அங்கிருந்த (AK47, SLR வகை) ஆயுதங்களுடன் தப்பி ஓடி விட்டனர். அதிகாலை நேரம் என்பதால், சில காவலர்கள் உறக்கம் கலைவதற்கு முன்னரே செத்துப் போனார்கள் ! இந்த அழித்தொழித்தலில், கிரேனடுகளும், பெட்ரோல் குண்டுகளும் சரமாரியாக வீசப்பட்டன. 13 காவலர்கள் கடும் காயமடைந்தனர். நக்ஸலைட் யாரும் இறந்ததாகத் தெரியவில்லை.

இதில் கொடுமை என்னவென்றால், காவலரில் 38 பேர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கிராமவாசிகள் ! அவர்கள் சம்பளம் வெறும் 1500 ரூபாய் ! ஏழைகளின் உரிமைக்காக போராடுவதாகக் கூறிக் கொள்ளும் நக்ஸல்பாரி இயக்கம், துளியும் இரக்கமின்றி, அவர்களைக் கொன்று குவித்துள்ளது. இதன் மூலம், இந்த அ·றிணை சென்மங்களின் கொள்கை லட்சணத்தை தெளிவாக புரிந்து கொள்ளலாம் !!!

கிட்டத்தட்ட, 400 நக்ஸலைட் தீவிரவாதிகள், யுத்தத் தயார் நிலையில் (in battle fatigues, தூங்கிக் கொண்டிருந்தவரை கொன்று குவிப்பதை யுத்தம் என்று கூறுவது மகா கேவலமாக இருப்பினும்!) வந்து, இந்த கொடிய அக்கிரமத்தை அரங்கேற்றியுள்ளனர் ! போலீஸ் போஸ்ட்டில் இருந்த காவலர் மொத்தம் 70 பேர் தான். மேலும், காவலர் சிலரை துடிக்க துடிக்க வெட்டிச் சாய்த்துள்ளனர். சமீப காலமாக, கிராமத்து பழங்குடியினர், நக்ஸல்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதிலிருந்து, இந்த மாவோயிஸ்ட் அரக்கர்கள், பொதுமக்கள், காவலர் என்று இரு தரப்பினரையும், குறி வைத்து, திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தி கொன்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது !

நமது மனித உரிமை, மன்னிக்கவும், நக்ஸல்/அ·ப்சல் உரிமைக் காவலர்கள், இப்போது சிறிது காலம் வசதியாக காணாமல் போய் விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதே ஆகும் ! அவர்களைத் தேடிப் போய் கேட்டால், நக்ஸல்பாரிகள் 'தேசிய இன எழுச்சிக்கும்', ஒடுக்கப்பட்டவரின் 'உரிமைக்கும்' போராடி வருவதாக, அளந்து விடுவார்கள்! எப்படி? யாருக்காக போராடுகிறோமோ, அவர்களையே ஈவு இரக்கமின்றி வெட்டிச் சாய்த்தா ????

இந்த அராஜக வன்முறையை செய்த கும்பலில், ஓரிருவர் பிடிபட்டு, நீதிமன்றம் அவர்களுக்கு மரணதண்டனை விதித்தால், காணாமல் போயிருந்த நமது (ஸ்பெஷல் மனிதர்களின் உரிமைக்கு மட்டுமே குரல் கொடுத்துப் போராடும்!) 'மனிதநேய'க் காவலர்கள் பாய்ந்தோடி வந்து, மனித உரிமைக்காக போராடுவதாக பாவ்லா காட்டி, விளம்பரம் தேடுவார்கள்! என்னத்த சொல்ல, எல்லாம் தலையெழுத்து !!!

தொடர்புடைய பதிவு: நக்ஸல்பாரிகளே (சீன) தேச பக்தர்கள்

எ.அ.பாலா

*** 311 ***

Thursday, March 15, 2007

தொடரும் யுத்தம் - Now Gavaskar vs Border

வாசிக்க:
 

நேற்று பாண்டிங்குக்கு தக்க பதிலடி தந்த கவாஸ்கர், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் ஹ¥க்ஸ் ஒரு பாருக்கு வெளியே அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வை தனது பேட்டியில் அனாவசியமாக குறிப்பிட்டதை ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், கண்டித்துள்ளார்.  கிரிக்கெட்  உலக சகாப்தங்களான கவாஸ்கர், பார்டர் பெயரில், இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெறும் அணிக்கு கவாஸ்கர்-பார்டர் கோப்பை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   பார்டர் கவாஸ்கரின் நல்ல நண்பரும் கூட! தற்போது அந்த (20 வருட) நட்பு முறியும் தறுவாயில் உள்ளது என்று பார்டர் தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்பான இந்த பாண்டிங்-கவாஸ்கர் சண்டையில் இதுவரை twelth man-ஆக இருந்த பார்டர், இப்போது பாண்டிங்குக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்!  "ஆஸ்திரேலிய அணியின் நடத்தை மற்றும் டேவிட் ஹ¥க்ஸ் குறித்தும் (என் நண்பரான) கவாஸ்கர் கூறியுள்ள கருத்துகள் தேவையற்றவை, முறையற்றவை. (இத நான் முதலில் சொன்னதுக்கு, என்னய பிடிச்சு, சிலர் உலுக்கிட்டாங்க :))  டேவிட் ஹ¥க்ஸ், ஒரு திறமையான வீரர், நல்ல குடும்பத் தலைவர் மற்றும் நண்பர்.  அவரை இதில் இழுத்தது, மிகத் தவறு.

ஆஸ்திரேலியா விளையாடும் விதம் குறித்து, கவாஸ்கருக்கு (பண்பாட்டு அளவிலான) ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கிறது!  ஆஸ்திரேலியர்களின் கடின வகைப்பட்ட (hard and tough) ஆட்ட அணுகுமுறையை, இந்தியாவில் இருப்பவர்கள் சரியில்லாததாக எண்ண வாய்ப்புள்ளது.  அது போலத் தான், ஆஸ்திரேலியர்கள், சில சமயங்களில், இந்தியாவின் ஆட்ட அணுகுமுறையை விரும்புவதில்லை. கிரிக்கெட், உலக அளவில் விளையாடப்படும்போது, ஆடும் அணிகளின் கலாச்சாரப் பின்னணி வேறுபடுவதால், ஆடும் விதம் சரியா தவறா என்பது நாட்டுக்கு நாடு மாறுபடுவதில் ஆச்சரியமில்லை. 

ஒரு ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர், ஒரு பேட்ஸ்மனை, 'you lucky bastard' என்று கூறுவது, இந்திய / வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்குத் தவறான ஒன்றாகத் தோன்றினாலும், இன்ன சிலருக்கு, அது சாதாரண விஷயமாகவே படலாம்!  இப்படி கலாச்சார சங்கதிகள் மாறுபடுவதை கவாஸ்கர் உணராதது, கவனிக்கத் தவறியது துரதிருஷ்டமே!

ஆஸ்திரேலிய வீரர்கள் sledging செய்வதை நான் ஒப்புக் கொள்ளும் நேரத்தில், நாங்கள் கடுமையாக விளையாடுவது (play hard) போல் தோன்றினாலும், நேர்மையான முறையிலேயே விளையாடுகிறோம்.  ஆஸ்திரேலிய வீரர்களின் கள நடத்தை (on-field behaviour) மட்டுமே சரியில்லை என்பது போன்ற தொனி கவாஸ்கரின் பேச்சில் தெரிகிறது."

என்று கூறி சண்டையை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ள அண்ணன் ஆலன் பார்டர் வாழ்க, வளர்க ;-)  இப்ப கவாஸ்கருக்கு ஆதரவாக பிஷன்சிங் பேடி களமிறங்கினால், ஆட்டம் சூப்பரா களை கட்டும் என்பது என் எண்ணம்!  மேலும் பலரும் இதில் மூக்கை நுழைத்து, சண்டையும் அமர்க்களப்படும் :)

இந்தப் பிரச்சினை பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேரன் லெம்மன் பேசுகையில், "கவாஸ்கர் போன்ற உலக அலவில் மதிக்கப்படும் ஒரு மனிதர், காலமாகி விட்ட ஒருவரின் நினைவுக்கு களங்கம் ஏற்படுத்துவது போல் பேசுவது கண்ணியமற்றது ! இது பலரை புண்படுத்தியுள்ளது.  ஒரு அணி வீரரின் கள நடத்தை மோசமானதாக இருந்தால், அவர் மேல் நடவடிக்கை எடுக்க, நியமிக்கப்பட்ட அலுவலர்கள் உள்ளனர் என்பதை கவாஸ்கர் வசதியாக மறந்து விட்டார்" என்று அவர் சார்பில் ஒரு கூக்ளி பந்து வீசி, விக்கெட் கிட்டுமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருப்பது போல் தெரிகிறது :)  (லெம்மனுக்கும் டைம் சரியில்லையோ, அனாவசியமா வாயை விடறாரே ?)

நான் ஏற்கனவே கூறியது போல, 'நமக்கு, அடிதடி, வம்புச்சண்டை போன்றவற்றை வேடிக்கை பார்ப்பதில் ஓர் அலாதி சுகம், அவ்வளவு தான் மேட்டர் ;-)'  இந்த மேட்டர், உலகக் கோப்பை ஆட்டங்களை விட விறுவிறுப்பாக செல்லும் போல் தோன்றுகிறது :)))

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 310 ***

Wednesday, March 14, 2007

309. கவாஸ்கர் பாண்டிங் - சண்டை வலுக்கிறது - ஹையா ஜாலி !

எனது முந்தைய பதிவில், ஊர் ரெண்டுபட்டால், (என் போன்ற!) கூத்தாடிகளுக்கு ஜாலி என்று எழுதியது, தற்போது கவாஸ்கர் கொடுத்துள்ள பதிலடியால் 'சூப்பர் ஜாலியாகி' விட்டது :)

தான் எவ்வாறு ஒரு சிறந்த துவக்க ஆட்டக்காரராக விளங்க முடிந்தது என்பதை, ரிக்கி பாண்டிங்கின் வாயிலிருந்து புறப்பட்ட (வார்த்தை) பவுன்ஸர்களை, அழகாக ஹூக் செய்து, அவற்றை பாண்டிங்கின்
வாயிற்கே திருப்பி அனுப்பி, அவரது வாயை அடைத்து, நிரூபித்து விட்டார் !!!  இதற்கு ஆங்கிலத்தில், "struck back with vengeance" என்ற சொலவடையை பயன்படுத்துவார்கள் ! என்னடா, போன பதிவிலே, பாண்டிங்குக்கு ஆதரவாப் பேசிட்டு, இப்ப பிளேட்டைத் திருப்பி, கவாஸ்கரைப் புகழ்ந்து பேசறாரே நம்ம பாலா என்று யாரும் தவறாக எண்ண வேண்டியதில்லை ! (பேச்சுத்) திறமை எங்கிருந்தாலும், அதை பாராட்டறது நம்ம பாலிஸி ;-)

ESPN தொலைக்காட்சியில் பேசிய கவாஸ்கர், "ஆஸ்திரேலிய வீரர்கள் ஆட்டக்களத்தில் நடந்து கொள்வது போல், ஒரு மது அருந்தும் இடத்தில் நடந்து கொண்டால், 'மண்டை சூடான' (hot headed) யாரிடமாவது உதைபடுவது திண்ணம் !  ஏனெனில், அவர்கள் பயன்படுத்தும் மொழி அவ்வளவு மோசமானது." என்று ஒரு சாத்து சாத்தியுள்ளார் :)  ஒரு பாருக்கு (Bar) வெளியே நடந்த ஒரு அடிதடி சண்டையில், டேவிட் ஹூக்ஸ் என்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த லிட்டில் மாஸ்டர், "அவருக்கு ஏற்பட்டது, ஆஸ்திரேலிய அணி வீரர் யாருக்கு வேண்டுமானாலும் நிகழும் அபாயம் உள்ளது !  ஆனால், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் எல்லாருமே அப்படி என்று நான் கூற வரவில்லை.  இப்படிப்பட்ட கண்ணியமற்ற மொழியை வெளியே பிரயோகித்தால், அவர்கள் முகத்தை நோக்கி ஒரு கைமுட்டி பாயும் வாய்ப்பு உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும் !" என்று கூறியுள்ளார்.

1981-இல் தன்னை வெளிநடப்பு செய்யத் தூண்டியது, ஆஸ்திரேலிய வீரர்களின் படு மோசமான சொற்களும், அவர்கள் நடந்து கொண்ட விதமும், என்று தெளிவுபடுத்திய கவாஸ்கர், "நான் அவர்கள்
களத்தில் நடந்து கொள்ளும் விதத்தை விமர்சித்தால், அதற்கு பதிலாக, பாண்டிங் இந்திய அணியின் தோல்விகளைப் பற்றிப் பேசுவது எப்படி சரியாகும் ?  ஒரு அணி மைதானத்தில் எத்தகைய குணங்களை
வெளிப்படுத்துகிறது என்பது கிரிக்கெட் விளையாட்டில் மிக முக்கியமான ஒன்று என்பது என் கருத்து" என்று மேலும் கூறினார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிகளே, பலருக்கும் அவ்வணியை பிடிக்காமல் போனதற்குக் காரணம் என்று பாண்டிங் கூறியதை திட்டவட்டமாக நிராகரித்த கவாஸ்கர், "1970 மற்றும் 80-களில், வெஸ்ட் இண்டீஸ் அணி, பிற அணிகளை (டெஸ்ட் போட்டிகளில்) 3 நாட்களில் வீழ்த்தியிருந்தாலும், அவ்வணியின் வீரர்களை மக்கள் நேசித்தனர். மக்களிடையே பிரபலமும், நல்ல பெயரும் அவர்களுக்கு அமைந்தது ! அதற்குக் காரணம், மைதானத்தில் அவர்கள் எதிரணியிடம் நடந்து கொண்ட விதமே ! Sledging ஒரு போதும் செய்ததில்லை ! தங்கள் திறமையையும், பலத்தையும் விளையாட்டில் (மட்டுமே!) காட்டி,
வெற்றிகளை குவித்தனர். அவர்களிடம் தோற்ற அணியினருக்கு, ஒரு புன்னகையுடன் ஆறுதல் கூறினர் ! தலைக்கனமோ, திமிரோ இன்றி, down to earth ஆக அவர்கள் இருந்ததால், உலகளாவிய புகழுடன் விளங்கினர்.  அதனாலேயே, தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணி, அன்று இருந்தது போல, ஒரு பலமிக்க அணியாக உருவெடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் இன்றும் ஆசைப்படுகிறனர்!" என்று கூறி, பாண்டிங்கிக்கிற்கு எதிரான தனது இன்னிங்க்ஸை (கவாஸ்கர்) கச்சிதமாக முடித்துக் கொண்டார் :) 

இப்போது பாண்டிங் என்ன கூறப்போகிறார் என்று பார்ப்போம்!  பாண்டிங் நல்ல பதிலடி கொடுத்தார்னா,
அவருக்குப் புண்ணியமாப் போகும் :) நமக்கு, அடிதடி, வம்புச்சண்டை போன்றவற்றை வேடிக்கை
பார்ப்பதில் ஓர் அலாதி சுகம், அவ்வளவு தான் மேட்டர் ;-)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 309 ***

Tuesday, March 13, 2007

308. குழந்தை பிரியதர்ஷினி நலம்

அன்பான நண்பர்களே,
குழந்தை பிரியதர்ஷினியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவித் தொகை திரட்ட வேண்டி, நான் இட்ட பதிவின் மற்றும் பொன்ஸ் இட்ட பதிவின் தொடர்ச்சியாக, பல வலையுலக நண்பர்கள் பொருளுதவி செய்தனர். நம் தமிழ் வலைப்பதிவாளர்கள் சார்பில், திரட்டிய உதவித்தொகையான ரூ.27,500-ஐ குழந்தையின் மருத்துவ உதவிக்கு வழங்கினோம். இம்முயற்சிக்கு ஆதரவு (உதவியும், பிரார்த்தித்தும்) தந்த நண்பர்களுக்கும், பொன்ஸ¤க்கும் நன்றிகள் பல. இந்த உதவி முயற்சியின்போது தான், மருத்துவமனையில் (Dr.Cherian's Heart Foundation) பொன்ஸையும், பாலபாரதியையும் முதன்முறையாக சந்திக்கும் பேறு கிட்டியது :)

இன்று பிரியதர்ஷினியை மூன்றாவது முறையாக சந்தித்தேன். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒரு வாரம் ஆகி விட்டது. நன்றாக நலம் பெற்று வருவதாக அறிந்தேன். அறுவை சிகிச்சைக்கு முன் முகம், கழுத்து, கைகளில் (இதயத்தில் நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்து விடுவதால்) காணப்பட்ட நீலநிற திட்டுக்கள் முழுதும் மறைந்து, குழந்தை பளிச்சென்று இருக்கிறாள். அவள் தாய் தந்தையும் மிக்க மனநிறைவுடன் பேசினர்.

நடந்து முடிந்த அறுவை சிகிச்சை சற்று காம்பிளக்ஸ் வகைப்பட்டது என்று டாக்டர் கூறினார். இன்னும் ஒரு வருடம், செக்கப்புக்கு வேண்டி ஒரு மூன்று முறை அவள், கோயமுத்தூரிலிருந்து சென்னை வர வேண்டியிருக்கும். மறுபிறவிக்கு ஒப்பாக, மீண்டு வந்திருக்கும் பிரியதர்ஷினியை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவளது பெற்றோருக்கு இன்று அறிவுரை (லேசாகத் தான்!) வழங்கி கொண்டிருந்தபோது, குழந்தை கண்ணயர்ந்து விட்டாள். சரி தான் என்று விடை பெற்றுக் கொண்டேன் :) கோயமுத்தூர் வந்தால், தங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்ற அவர்களது அன்பான அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.

நமது உதவித்தொகை தவிர, பிரியதர்ஷினிக்கு விப்ரோவிலிருந்தும், சில தொண்டு நிறுவனங்களிலிருந்தும் கிட்டத்தட்ட 1,20,000 ரூபாய் நிதியுதவி வந்திருந்தது. ஏதோ ஒரு விதத்தில், ஒரு நல்ல காரியத்தில், நம் பங்கை ஆற்றியிருக்கிறோம் என்ற அளவில், மனநிறைவும், மகிழ்ச்சியும் ! உதவிய நண்பர்களுக்கு மீண்டும் நன்றி. ஒத்துழைப்பு தந்த பொன்ஸ¤க்கும், பாலபாரதிக்கும் எல்லோர் சார்பிலும் வாழ்த்துக்கள் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 308 ***

307. கவாஸ்கரை உலுக்கிய ரிக்கி பாண்டிங்

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, Do not preach something that you cannot follow yourself என்று !  அதற்கு எதிர்மறையாக நடந்து கொண்டு கவாஸ்கர் 'நுணலும் தன் வாயாற் கெடும்' என்பதை நிரூபித்து விட்டார் ! என்ன மேட்டர் என்று கேட்கிறீர்களா ?

ஆஸ்திரேலிய அணியைப் பற்றி தன் திருவாய் மலர்ந்த கவாஸ்கர், "ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த, திறமை மிக்க, அணியாக கடந்த பத்து வருடங்களாக இருப்பினும், அணி வீரர்கள் சில சமயங்களில்
பண்பாடற்ற வகையில் நடந்து கொண்டு, பலரின் வெறுப்பைச் சம்பாதித்து உள்ளனர்" என்று கூறியுள்ளார்  !   கடுப்பான ஆஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் கவாஸ்கரை பிடித்து ஒரு வாங்கு வாங்கி விட்டார் :)  ஒரு முறை (1981) மெல்பர்னில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது, அம்பயர் அவருக்கு தவறாக LBW கொடுத்து விட்டதாகக் கூறிக் கொண்டு, அப்போது கேப்டனாக இருந்த கவாஸ்கர் கொதிப்படைந்து, சக ஆட்டக்காரர் சேத்தன் சவானை இழுத்துக் கொண்டு களத்தை விட்டு வெளியேற முயன்றதை நினைவு கூர்ந்த பாண்டிங்,

"எனக்குத் தெரிந்தவரையில் (கவாஸ்கர் தவிர்த்து) எந்த ஒரு அணித்தலைவரும், சக ஆட்டக்காரரை இழுத்துக் கொண்டு ஆடுகளத்தை விட்டு வெளிநடப்பு செய்ய முயன்றதில்லை !  அவ்வாறு செய்த ஒருவர், பிறருக்கு இவ்வளவு போதனை செய்யலாமா !  எல்லாரையும், எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்பது எங்களுக்கு (அணிக்கு) இயலாத காரியம் !  ஆனால், கௌரவமற்ற செயல்களைச் செய்தவர்கள், இப்படி எங்களை கடிந்துரைப்பது மிகையான, சற்று திமிரான செயலாகவே தோன்றுகிறது. 
எங்கள் அணி பல வருடங்களாக ஒரு வெற்றி அணியாக இருப்பதே, எங்கள் மேல் ஒருவித வெறுப்பு நிலவுவதற்குக் காரணம், இது கூட இயற்கையான வெளிப்பாடே ! 

கவாஸ்கர் ஆஸ்திரேலிய அணியை விமர்சனம் செய்வதை விடுத்து, சர்வதேச அளவில் இந்திய அணியின் ரெக்கார்டை முன்னேற்றுவதில் தன் கவனத்தை செலுத்தினால் நல்லது !  (எங்களை விமர்சிப்பவர்கள்) எங்கள் மேல் செலுத்தும் கவனத்தை, தங்கள் (தங்கள் அணி) ஆட்டத் திறனை வளர்ப்பதில் செலுத்தினால் நல்ல பலன் இருக்கும் ! பல காலமாக, பிற அணிகள் வெல்ல முடியாத / சிரமப்படுகின்ற ஒரு அணியாக ஆஸ்திரேலியா இருப்பதால் தான், எங்கள் அணிக்கு ஆதரவாளர்கள் குறைவாக உள்ளனர் !!! அவ்வளவு தான் மேட்டர்"

என்று ஒரே போடாக போட்டு, கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.  கவாஸ்கரே இந்த 'பாண்டிங்' தாக்குதலை எதிர்பார்த்திருக்க மாட்டார் !  அவர் என்ன கூறப்போகிறார் என்று பார்ப்போம் !  ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே !  ஒங்களைச் சொல்லலீங்க, என்னயத் தான் சொல்லிக்கறேன் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 307 ***

 

Saturday, March 10, 2007

306. காஞ்சி திவ்ய தேசப் பயணம் - Part 3

புனித யாத்திரையின் முதல் மற்றும் இரண்டாவது பகுதிகளை வாசித்து விட்டுத் தொடரவும்.

அடுத்து, திருவேளுக்கையில் எழுந்தருளியுள்ள அழகியசிங்கரை சேவிக்க புறப்பட்டோம். தாயார் அம்ரிதவல்லி நாச்சியார். சிறப்பான தரிசனம் !


இத்திருத்தலத்தை பேயாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

2307:
சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும்,*
நிறைந்தசீர் நீள்கச்சி உள்ளும்,* - உறைந்ததுவும்,
வேங்கடமும் வெ·காவும்* வேளுக்கைப் பாடியுமே,*
தாம்கடவார் தண் துழாயார்.

2315@
அன்று இவ்வுலகம்* அளந்த அசைவேகொல்,*
நின்றிருந்து வேளுக்கை நீள்நகர்வாய்,* - அன்று
கிடந்தானைக்* கேடில்சீரானை,*முன் கஞ்சைக்
கடந்தானை* நெஞ்சமே. காண்.

2343@
விண்ணகரம் வெ·கா* விரிதிரைநீர் வேங்கடம்,*
மண்ணகரம் மாமாட வேளுக்கை,*- மண்ணகத்த
தென்குடந்தை* தேனார் திருவரங்கம் தென்கோட்டி,*
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.
**********************************************

அடுத்து, பரமேஸ்வர விண்ணகரத்தில் எழுந்தருளியிருக்கும் வைகுந்தப் பெருமாள் என்னும் பரமபதநாதனைச் சேவித்தோம்.

இக்கோயில் ரம்யமான சூழலில் அமைந்திருப்பது, மனதில் ஒர் இதமான உணர்வை ஏற்படுத்தியது.

கோயில் உள்பிரகாரச் சுவர்கள் முழுதும் பழமை வாய்ந்த சிற்ப வேலைப்பாடுகளை காண முடிந்தது. சரியான பராமரிப்பின்றி, பல சிற்ப வடிவங்கள் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டன. இக்கோயில் இந்திய தொல்பொருள் கழகத்தின் கட்டுப்பாட்டில் வருவதாக, எங்களுடன் வந்த நண்பர் தெரிவித்தார்.


இத்திருத்தலத்தை திருமங்கை மன்னன் மங்களாசாசனம் செய்துள்ளார்.
1128@..
சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச்* சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமுமாய்*
நல்லரன் நான்முகன் நாரணனுக்கு இடந்தான்* தடம் சூழ்ந்து அழகாயகச்சி*
பல்லவன் வில்லவனென்று உலகில்* பலராய்ப்பல வேந்தர் வணங்குகழல் பல்லவன்*
மல்லையர்க்கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரமதுவே.

வேதம் உரைப்பதின் பொருளாகவும், வேத நாதத்தின் ஒலியாகவும், ஐம்புலன்களால் அறிவதற்கு அப்பாற்பட்டவனும், சிவபிரம்மத்தினுள் அந்தர்யாமியாக திகழ்பவனும் ஆன எம்பெருமானை, உலக மன்னர்களெல்லாம் போற்றிப் பணியும் பல்லவ மாமன்னன், இப்பரமேஸ்வர விண்ணகரத்தில் திருவடி பணிந்து வணங்கினான்.

1136@
பிறையுடை வாணுதல் பின்னை திறத்து* முன்னே ஒரு கால்செருவில் உருமின்*
மறையுடை மால்விடையேழடர்த்தாற்கு இடந்தான்* தடம் சூழ்ந்த அழகாயகச்சி*
கறையுடைவாள் மறமன்னர்க்கெட* கடல்போல் முழங்கும் குரல்கடுவாய்*
பறையுடைப் பல்லவர்க்கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரமதுவே.

பிறை போன்ற அழகிய நெற்றியைக் கொண்ட நப்பின்னையின் கரம் பற்ற வேண்டி, ஒரு சமயம், இடியை ஒத்த குரல் உடைய ஏழு வலிமை மிக்க எருதுகளை, கண்ணபிரான் மிக எளிதாக வீழ்த்தி அழித்தான். அப்பெருமானே, அழகிய குளிர்த் தடாகங்கள் சூழ்ந்த காஞ்சியில் உள்ள பரமேஸ்வர விண்ணகரத்தில் எழுந்தருளி இருக்கிறான்.

குருதிக் கறையுடைய வாளை கையில் ஏந்திய பகை நாட்டு மன்னரெல்லாம் வீழ்ந்து போகும்படியாக, ஆர்ப்பரிக்கும் கடலலைக்கு ஒத்த பேரொலி எழுப்பும் போர் முரசு கொட்டும் படை கொண்ட பல்லவ மாமன்னன், இப்பரமேஸ்வர விண்ணகரத்தில் ஆட்சி புரியும் வைகுந்த நாதனை வணங்கி திருவடி பணிந்தான்.

*********************************

அடுத்து, மிக்க பழமை வாய்ந்த தீபப்பிரகாசர் என்னும் விளக்கொளிப் பெருமாள் அருள் பாலிக்கும்
திருத்தண்கா
திவ்யதேசத்திற்குச் சென்று, பெருமாளையும், மரகதவல்லித் தாயாரையும் தரிசித்தோம்.


திருமங்கை மன்னன் இத்தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார்.

பொன்னை மாமணியை* அணி ஆர்ந்ததோர்-
மின்னை* வேங்கடத்து உச்சியில் கண்டுபோய்*
என்னை ஆளுடை ஈசனை* எம்பிரான்-
தன்னை* யாம் சென்று காண்டும்* தண்காவிலே.

முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை* மூவா-
மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற,*
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய-
அந்தணனை* அந்தணர்தம் சிந்தை யானை,*
விளக்கொளியை மரதகத்தைத் திருத்தண்காவில்*
வெ·காவில் திருமாலைப் பாடக் கேட்டு*
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக. என்று*
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே. 14

மற்ற ஆழ்வார்களை விட, அதிகமான திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்தவர் திருமங்கையார் தான். பல நூறு ஆண்டுகளுக்கு முன், தன் துணைவி குமுதவல்லி நாச்சியாருடன் (ஆழ்வாரை நல்வழிப்படுத்தி வைணவ அடியாராய் ஆக்கிய இப்பெண்மணி போற்றுதலுக்குரியவர்) நடையாய் நடந்து, பரத கண்டத்தில் உள்ள பல வைணவத் தலங்களுக்கு விஜயம் செய்து, பரமபக்தியில், மனமுருகி திருப்பாசுரங்கள் இயற்றி, அவற்றைப் பாடல் பெற்ற தலங்களாக (வைணவ திவ்யதேசங்களாக) ஆக்கியவர் கலியன் என்றும் அழைக்கப்படும் இப்பெருமகனார் ! பரமனுக்கே பெருமை சேர்த்த வைணவ அடியார்களின் வரிசையில் இவருக்கு சிறப்பிடம் தரப்பட்டிருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் !

திருத்தண்கா கோயிலுக்கு அருகே உள்ள தூப்புல் வேதாந்த தேசிகரை சேவித்தோம். அவரது தத்துவ விசார வாதத் திறமையின் காரணமாக, பாகவத சிம்மம் என்று போற்றப்பட்டவர். தமிழ், சமஸ்கிருதம் என்று இரு மொழிகளிலும் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார். உத்சவத்தின் போது, உத்சவ தேசிகர் பவனி வரும் யானை, சிம்மம், யாளி வாகனங்கள் தேசிக சன்னிதியின் வலது புறம் பளபளப்பாக காட்சியளித்தன !
******************************
காஞ்சியில் உள்ள 14 திவ்யதேசங்களின் தரிசனம் நிறைவடைந்தபோது, மாலை மணி 6.30 மணியாகி விட்டது. 15-வது திவ்யதேசமான திருப்புட்குழி காஞ்சி-வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சியிலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

அங்கும் சென்று, விஜயராகவப் பெருமாளையும், மரகதவல்லித் தாயாரையும் கண் குளிர சேவித்தோம். மிக அற்புதமான சேவை என்று கூறுவேன் ! இத்தலப் பெருமாள் ராம ரூபமாய் அறியப்படுபவர். இராமபிரான், தன் பொருட்டு இராவணனுடன் போரிட்டு உயிர் துறந்த ஜடாயுவை தகனம் செய்தபோது, அக்னி ஜ்வாலையில் எழுந்த வெப்பத்தின் தீவிரத்தைத் தாள முடியாத காரணத்தினாலே, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள், பெருமாளை பார்த்தபடி, அவர் பக்கம் தலை சாய்த்தபடி காட்சியளிப்பது ஐதீகம் என்று கோயில் பட்டர் கூறினார்.

இக்கோயில் தீர்த்தமும் ஜடாயு தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. சமீபத்தில் சீரமைக்கப்பட்டு, கோயில் அழகாகத் தோற்றமளிக்கிறது.

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்:
1115:##
அலங்கெழு தடக்கை ஆயன்வாயாம்பற்கு* அழியுமால் என்னுள்ளம். என்னும்*
புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்* போதுமோ நீர்மலைக்கு என்னும்*
குலங்கெழு கொல்லி கோமளவல்லிக்* கொடியிடை நெடுமழைக் கண்ணி*
இலங்கெழில் தோளிக்கு என்நினைந்திருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே.

ஒரு வழியாக, திட்டமிட்டபடி 15 வைணவத் திருப்பதிப் பெருமாள்களையும் ஆனந்தமாக தரிசித்து, மன நிறைவுடனும், சந்தோஷமாக அளாவளவிய நினைவுகளுடனும், இரவு 9.30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 306 ***

Thursday, March 08, 2007

305. காஞ்சி திவ்ய தேசப் பயணம் - Part 2

புனித யாத்திரையின் இரண்டாவது சுற்றை நான்கு மணிக்கு, திருக்காஞ்சியிலிருந்து தொடங்கினோம். காஞ்சி புனித யாத்திரையின் முதல் சுற்று குறித்து இங்கே எழுதியிருக்கிறேன்.

மூலவரை தரிசிக்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். வரதர் கோயிலில் பணி புரியும்
அன்பர் ஒருவரின் தயவால், தரிசனம் சீக்கிரம் கிடைத்தது. நான்முகன் இங்கு பெருமாளை
வழிபட்டதால், இத்தலம் அத்திகிரி என்று அறியப்பட்டு, மருவி, கச்சி என்றும் பின் காஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது.


வரதர் வேட்டைப் பெருமாளாக கையில் வில்லுடன் !!!

மூலவர் கஜேந்திர வரதரை 25 ஆண்டுகளுக்குப் பின் தரிசித்தது, நிச்சயம் ஒரு மகிழ்தருணம், ஆனந்த
அனுபவமும் கூட. தாயார் பெருந்தேவி நாச்சியார். இங்குள்ள தங்கபல்லி விசேஷம் ! ....கோயிலில் சுவையான புளியோதரையும், வடையும் கிடைத்தது


இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்துத் தூண்களில் நுணுக்கமாக செதுக்கப்பட்ட அழகிய சிற்ப வடிவங்கள் பிரசித்தி பெற்றவை.





நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை, திருக்குளத்து அடியிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் தரும் 'அத்திவரதப்' பெருமாளை, 30 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் பயிலும் காலத்தில், 6 மணி நேரம் வரிசையில் நின்று சேவித்தது ஞாபகத்தில் நிழலாடியது. ஏழ்மையிலும், கவலையில்லாத சந்தோஷமான காலமது !

பெருமை மிக்க திருக்காஞ்சியை திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். முந்தைய பதிவில் இடம் பெற்ற சில பாசுரங்களைத் தவிர்த்திருக்கிறேன்.

திருமங்கையாழ்வார்
2050@..
பிண்டியார் மண்டை ஏந்திப் * பிறர்மனை திரிதந்துண்ணும்-
உண்டியான்* சாபம் தீர்த்த ஒருவனூர்,* உலக மேத்தும்-
கண்டியூர் அரங்கம் மெய்யம் * கச்சிபேர் மல்லை என்று-
மண்டினார்,* உய்யல் அல்லால் * மற்றையார்க்கு உய்யலாமே? (2)

2066@
கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய-
களிறு என்றும்* கடல்கிடந்த கனியே. என்றும்,*
அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி*
அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,*
சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித்*
தூமுறுவல் நகைஇறையே தோன்ற நக்கு,*
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி ஆங்கே*
மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பேதையே. 15

பூதத்தாழ்வார்
2276:
என்னெஞ்சம் மேயான்* என் சென்னியான்,* தானவனை-
வன்னெஞ்சம்* கீண்ட மணிவண்ணன்,* முன்னம்சேய்-
ஊழியான்* ஊழி பெயர்த்தான்,* உலகேத்தும்-
ஆழியான்* அத்தியூரான். 95

2277@..
அத்தியூரான்* புள்ளை ஊர்வான்,* அணிமணியின்-
துத்திசேர்* நாகத்தின் மேல்துயில்வான்,* - மூத்தீ-
மறையாவான்* மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்*
இறையாவான் எங்கள் பிரான். (2)

பேயாழ்வார்
2307@
சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும்,*
நிறைந்தசீர் நீள்கச்சி உள்ளும்,* - உறைந்ததுவும்,
வேங்கடமும் வெ·காவும்* வேளுக்கைப் பாடியுமே,*
தாம்கடவார் தண் துழாயார்.

தெற்கு மாடவீதியில் நான் வாழ்ந்த பழைய வீட்டை பார்க்க ஆசைப்பட்டு, காரில் ஒரு ரவுண்ட்
அடித்தோம். காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களால், என்னாலேயே எங்கள் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை ! இடித்துக் கட்டப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். சில வயதானவர்களை விசாரித்தும் பயனில்லை. காது சற்று மந்தமான அவர்களுக்குப் போராடி புரிய வைப்பதற்குள், என் தொண்டை புண்ணானது தான் மிச்சம் :)
*************************************


அடுத்து, சொன்ன வண்ணம் செய்த பெருமாள் (யதோக்தகாரி) எழுந்தருளியிருக்கும்
திருவெ·கா தலத்துக்குச் சென்றோம்.




உத்சவ மூர்த்தி மிக்க அழகுடன், கம்பீரமாய் காட்சியளிக்கிறார். பெருமாள் இப்பெயர் பெறுவதற்குப் பின்னால் ஒரு சுவையான பழங்கதை ஒன்று உண்டு !

திருமழிசையாழ்வாருக்கு கணிகண்ணன் என்ற சிஷ்யர் இருந்தார். ஒரு சமயம், பல்லவராயன் என்ற காஞ்சி மன்னன், கணிகண்ணனை தன்னைப் புகழ்ந்து கவி பாடுமாறு கேட்க, அவர் அதை மறுத்து, திருவெ·காவைப் போற்றி ஒரு கவி பாட, சினங்கொண்ட கொற்றவன், அவரை நகரை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டான். ஆழ்வாரிடம் விடைபெறப் போன கணிகண்ணனிடம், 'நானும் பெருமாளைக் கூட்டிக் கொண்டு உன்னுடன் வெளியேறுகிறேன்' என்று சொன்ன ஆழ்வார், திருவெ·கா கோயில் சென்று, பெருமாளைத் தொழுது,

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்

என்று வேண்டவே, பெருமாளும் யோக நித்திரை விட்டெழுந்து, அம்மூவரும் (பெருமாள், ஆழ்வார்,
கணிகண்ணன்) அவ்வூரை விட்டு அகன்று, அருகில் உள்ள ஓர் ஊருக்கு சென்று தங்கினர். இதனால், காஞ்சி முழுதும் ஒளியிழந்து, இருள் சூழ்ந்த நகரமாயிற்று. தன் தவறை உணர்ந்த அரசன் தன் மந்திரிமாரோடு கணிகண்ணனிடம் சென்று தன்னை மன்னித்து மீண்டும் காஞ்சி நகருக்கு வருமாறும் வேண்டினான். கணிகண்ணன் ஆழ்வாரை நோக்க, அவரும் அதற்கு ஒப்பி, சேஷசாயிப் பெருமானை நோக்கி,

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக் கொள்

என்று முன்பு பாடிய பாட்டை மாற்றிப் பாடி வேண்ட, எம்பெருமான் அதற்கும் உடன்பட்டு, ஆழ்வாரும் கணிகண்ணனும் உடன்வர திருவெ·காவில் மீண்டெழுந்தருளினார். மூவரும் சென்று, ஓர் இரவு தங்கியிருந்த கிராமமானது, 'ஓரிரவிருக்கை' என்ற பெயர் பெற்று, பின் மருவி, ஓரிக்கை என்று இப்போது அழைக்கப்படுகிறது.

ஆழ்வார் மேலுள்ள அபிமானத்தால், தான் இவ்வாறு திருவெ·கா விட்டு விலகி, பின் மீண்டும் அக்கோயிலுள் பிரவேசித்த நிகழ்வை, தன்னை சேவிக்க வரும் அடியார்கள் அறிந்துணர வேண்டும் என்பதற்காக, வெளியேறுவதற்கு முன் வலக்கை கீழிருந்தவாறு கிடந்த எம்பெருமான், மீள்வருகைக்குப் பின், இடக்கையை தலைக்குக் கீழ் வைத்த சயன திருக்கோலத்தில் காட்சி தரலானார் ! 27 திவ்யதேசங்களில் கிடந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கு பெருமாள், திருவெ·காவில் மட்டுமே, இடக்கை கீழிருக்க யோக நித்திரையில் உள்ளார்.

சிறப்பு மிக்க திருவெ·காவை திருமங்கையாழ்வார் திருமழிசையாழ்வார் பொய்கையாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

திருமங்கையாழ்வார்
1854:
கூந்தலார் மகிழ்* கோவலனாய்* வெண்ணெய்-
மாந்தழுந்தையில்* கண்டு மகிழ்ந்துபோய்*
பாந்தள் பாழியில்* பள்ளி விரும்பிய*
வேந்தனைச் சென்று காண்டும்* வெ·காவுளே

2065@
முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை* மூவா-
மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற,*
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய-
அந்தணனை* அந்தணர்தம் சிந்தை யானை,*
விளக்கொளியை மரதகத்தைத் திருத்தண்காவில்*
வெ·காவில் திருமாலைப் பாடக் கேட்டு*
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக. என்று*
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.

திருமழிசையாழ்வார்
2417@..
நாகத்தணைக் குடந்தை* வெ·கா திருவெவ்வுள்*
நாகத்தணை அரங்கம் பேரன்பில்*
நாகத்தணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தன் ஆவான்.

பொய்கையாழ்வார்
2158@
வேங்கடமும்* விண்ணகரும் வெ·காவும்,* அ·காத-
பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும்,* - நான்கிடத்தும்-
நின்றான் இருந்தான்* கிடந்தான் நடந்தானே,*
என்றால் கெடுமாம் இடர்.

பேயாழ்வார்
2345:
இசைந்த அரவமும்* வெற்பும் கடலும்,*
பசைந்தங்க அமுது படுப்ப,* - அசைந்து
கடைந்த வருத்தமோ* கச்சி வெ·காவில்,*
கிடந்திருந்து நின்றதுவும் அங்கு?

2357@
பொருப்பிடையே நின்றும்* புனல்குளித்தும்,* ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா* - விருப்புடைய
வெ·காவே சேர்ந்தானை* மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,*
அ·காவே தீவினைகள் ஆய்ந்து.

நம்மாழ்வார்
2503@
நானிலம் வாய்க்கொண்டு* நன்னீரறமென்று கோதுகொண்ட,*
வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை,* கடந்தபொன்னே.-
கால்நிலந் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெ· காவுது* அம்பூந்-
தேனிளஞ் சோலை அப்பாலது,* எப்பாலைக்கும் சேமத்ததே.
***********************************


அங்கிருந்து, அருகிலேயே இருந்த அஷ்டபுயகரப் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். எட்டு
திருக்கரங்களுடன், நின்ற திருக்கோலத்தில் ஆதிகேசவப் பெருமாள் கம்பீரமான அழகுடன் காட்சியளிக்கிறார். வலக்கரங்களில் பாஞ்சஜன்யம், கத்தி, தாமரை, வில்லுடனும், இடக்கரங்களில் சங்கு, பாணம், கேடயம் மற்றும் கதாயுதத்துடனும் காட்சி தரும் மூலவரை கண் குளிர சேவித்தோம் ! இப்பெருமான் வேங்கட ரூபமாய் அறியப்படுவதால், கோயில் தாயாருக்கு அலர்மேல் மங்கை (பத்மாசினி) என்று திருநாமம்.

இத்திருத்தலத்தை திருமங்கையாழ்வார், பேயாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

1119@
வெந்திறல் வீரரில் வீரரொப்பார்* வேதம் உரைத்து இமையோர் வணங்கும்*
செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்* தேவர் இவர்கொல் தெரிக்கமாட்டேன்*
வந்து குறளுருவாய் நிமிர்ந்து* மாவலி வேள்வியில் மண்ணளந்த*
அந்தணர் போன்று இவரார்க்கொல்? என்ன* அட்ட புயகரத்தேனென்றாரே.

1122.
கலைகளும் வேதமும் நீதிஞூலும்* கற்பமும் சொற்பொருள் தானும்* மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்* நீர்மையினால் அருள் செய்து* நீண்ட
மலைகளும் மாமணியும்* மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற*
அலைகடல் போன்று இவரார்க்கொல் என்ன* அட்டபுயகரத்தேனென்றாரே.

2380...
தொட்ட படையெட்டும்* தோலாத வென்றியான்,*
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று,* - குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக்* குறித்தெறிந்த சக்கரத்தான்*
தாள் முதலே நங்கட்குச் சார்வு. (2)
**********************************************

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 305 ***

Monday, March 05, 2007

304. காஞ்சி திவ்ய தேசப் பயணம் - Part 1

ஏற்கனவே திட்டம் தீட்டி, ஜனவரி 26 அன்று காஞ்சியில் உள்ள 15 வைணவ திவ்ய தேசங்களுக்கு செல்ல, ஒரு பயணம் ஏற்பாடு செய்திருந்தேன். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பின் காஞ்சி செல்வதாலும், ஒரு காலத்தில் பல பள்ளி விடுமுறைகளை அங்கே குதூகலமாக செலவிட்டது ஞாபகத்தில் பசுமையாக இருப்பதாலும், நான் சுற்றித் திரிந்த இடங்களில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும், ஒரு சுகமான பரபரப்பு தொற்றிக் கொண்டது ! என்னுடன் என் மனைவியும், மாமா, மாமியும் உடன் வந்தனர்.

காலை 6.30 மணிக்கு, காரில் பயணத்தைத் தொடங்கினோம். நடுவில், மோட்டல் ஹைவேயில் காலைச் சிற்றுண்டி. 3 நாட்கள் விடுமுறையில், சொந்த ஊருக்கோ சுற்றுலாவாகவோ மக்கள் பயணிக்கும் சமயம் என்பதால், உணவகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. தை வெள்ளிக்கிழமை வேறு, ஒரே நாளில் 15 கோயில்களிலும் தரிசனம் முடித்து சென்னை திரும்ப முடியுமா என்ற கேள்வி மனதில் எழுந்தது. குறிப்பிட்ட 15 கோயில்களில், திருப்புட்குழி தவிர, மற்ற 14-ம் 6-7 கி.மீ பரப்பில் தான் அமைந்துள்ளன. என்ன, பகல் 12 மணிக்குக் கோயிலை மூடினால், மாலை நான்கு மணிக்குத் தான் மறுபடியும் திறப்பார்கள்.

தண்டலம் என்ற இடத்தில் (பீர் தொழிற்சாலை அருகே) கார் சென்று கொண்டிருந்தபோது ஒரு விபத்து ! சவீதா பொறியியற் கல்லூரி பேருந்து ஒன்று, சாலையின் வெளிப்பாதையிலிருந்து, வலப்புறம் திரும்ப வேண்டி, எங்கள் பாதையின் குறுக்கே சடாரென்று நுழைந்தது. எங்கள் கார் ஓட்டுனரின் துரித செயல்பாட்டினால், தெய்வாதீனமாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் பிழைத்தோம் ! காரின் வலப்பக்கம் பேருந்தின் மேல் மோதி நின்றதில் காருக்கு பலத்த சேதம். குடியரசு தினம் என்பதால், தகவல் கொடுத்தும் போக்குவரத்துக் காவலர் யாரும் விபத்து நடந்த இடத்திற்கு உடனே வரவில்லை.

சிறிது நேர காத்திருப்பிற்குப் பின், பூந்தமல்லி காவல் நிலையம் சென்று புகார் செய்தோம். பயணத்தை கைவிட்டு, சென்னைக்குத் திரும்பி விடலாம் என்ற யோசனையை நான் வீட்டோ செய்தேன் ! மற்றொரு காரை ஏற்பாடு செய்து, காஞ்சி நோக்கி பயணப்பட்டோம்.

பத்து மணிக்குக் காஞ்சி சென்றடைந்தோம். நுழைந்தவுடன், மண்ணும் சாணமும் கலந்த, எனக்குப் பழக்கப்பட்ட பழைய வாசனை !
Photobucket - Video and Image Hosting
முதலில் தரிசித்தது, ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் நிலாத்திங்கள் துண்டப் பெருமாளை! திருமங்கையாழ்வாரால் (திருநெடுந்தாண்டகத்தில்) மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் இவர் !
2059:
நீரகத்தாய். நெடுவரையின் உச்சி மேலாய்.*
நிலாத்திங்கள் துண்டத்தாய். நிறைந்த கச்சி-
ஊரகத்தாய்,* ஒண்துறைநீர் வெ·கா உள்ளாய்.*
உள்ளுவார் உள்ளத்தாய்,* உலகம் ஏத்தும்-
காரகத்தாய். கார்வானத் துள்ளாய். கள்வா.*
காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு-
பேரகத்தாய்,* பேராது என் நெஞ்சின் உள்ளாய்.*
பெருமான்உன் திருவடியே பேணினேனே.

பிரம்மாண்டமான, அழகான ராஜகோபுரமும், பெரிய பிரகாரமும் உடைய சிவன் கோயிலிது. கூட்டம் அதிகமாக இருந்ததால், சிவபெருமானை தரிசிக்க முடியவில்லை.

Photobucket - Video and Image Hosting
அடுத்து, திருப்பாடகத்தில் வீற்றிருந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கும் பாண்டவத்தூதப் பெருமாளை சேவித்தோம். பெரிய காஞ்சிபுரத்தில், கங்கை கொண்டான் மண்டபத்துக்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான (28 அடி உயரம்), நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட, அழகிய முகபாவத்துடனான முலவர் திருவுருவம், குனிந்து தான் திருமுகத்தை தரிசிக்க இயலும் !

கோயிலில் உள்ள கல்வெட்டில், மூலவர் 'தூத ஹரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளார். உத்சவர் ருக்மிணி சத்யபாமா சமேதராய் காட்சியளிக்கிறார். திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலமிது. காஞ்சி செல்பவர்கள் கட்டாயம் இக்கோயிலுக்குச் சென்று மூலவரை சேவிக்க வேண்டும்.

மகாபாரத போருக்கு முன்னால், துரியோதனனிடம் சமாதானம் பேசி, ராஜ்ஜியத்தில் பாண்டவர்களுக்கான பங்கை கேட்டுப் பெறுவதற்காக, கிருஷ்ணர் பாண்டவத் தூதராக துரியோதன சபைக்கு வந்தபோது, துரியோதனன் கண்ணனை அழிக்க செய்த சதி தோல்வியடைந்ததாகவும், துரியோதனன் பாண்டவர்க்கு 5 அடி நிலம் கூட தர மறுத்ததால் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட சீற்றத்தால் அவர் அமர்ந்திருந்த இருக்கை தூள் தூளானதாகவும், பின்னாளில் ஜனமேயஜயன் என்ற பாண்டவ வழி வந்த மன்னனுக்கு ஸ்ரீமன் நாராயணன் இத்தலத்தில் விஸ்வரூப தரிசனம் அளித்ததாகவும் தலபுராணம் கூறுகிறது.

திருமங்கை
கல்லார்மதிள்சூழ்* கச்சி நகருள்நச்சிப்*
பாடகத்துள் எல்லா உலகும்வணங்க* இருந்தஅம்மான்*
இலங்கைக்கோன் வல்லாளாகம்* வில்லால் முனிந்த எந்தை*
விபீடணற்கு நல்லானுடைய நாமம்சொல்லில்* நமோநாராயணமே

கல் மதில்களால் சூழப்பட்ட அழகிய காஞ்சி நகரில் உள்ள திருப்பாடகத்தில் கம்பீரமாக அமர்ந்து, உலகமெல்லாம் தன்னை வணங்க அருள் பாலிக்கும் எம்பெருமானே, தனது அம்பால் வலிமை மிக்க இராவணனை அழித்தவனும், விபீடணனுக்கு உகந்தவனும் ஆவான். 'நமோ நாராயணமே' என்று அவனது திருநாமத்தைப் போற்றித் தொழுவது ஒன்றே, நாம் உய்வதற்கான வழியாகும் !

பூதத்தாழ்வார்
உற்று வணங்கித்* தொழுமின் உலகேழும்*
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம்,* - பற்றிப்-
பொருந்தாதான் மார்பிடந்து* பூம் பாடகத்துள்-
இருந்தானை,* ஏத்தும் என் நெஞ்சு.

பேயாழ்வார்
சேர்ந்த திருமால்* கடல்குடந்தை வேங்கடம்*
நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு,* - வாய்ந்த
மறைபாடகம் அனந்தன்* வண்துழாய்க் கண்ணி,*
இறைபாடி ஆய இவை.


மூன்றாவதாக, பச்சை வண்ணன் மற்றும் பவளவண்ணன் கோயில்களுக்குச் (இவை இரண்டையும் சேர்த்து ஒரு திவ்ய தேசமாக நோக்குவது மரபு) சென்றோம். இரண்டு உத்சவ மூர்த்திகளும் பேரழகு ! பவளவண்ணப் பெருமாள் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்திலும், பச்சை(மரகத)வண்ணப் பெருமாள் ஆதிசேஷன் மேல் (பரமபதநாதனாக) வீற்றிருந்த திருக்கோலத்திலும் அருள் பாலிக்கின்றனர். பச்சைவண்ணர் சிவனின் அம்சமாகவும், பவளவண்ணன் பார்வதியின் அம்சமாகவும் கருதப்படுவதால், இருவரையும் ஒரு சேர சேவிப்பது, சிவனையும் பார்வதியையும் சேர்ந்து தரிசிப்பதற்கு ஒப்பாகும்.

பச்சைவண்ணர் ராமாவதார ரூபமாகக் கருதப்படுவதால், இங்குள்ள தாயாருக்கு த்ரிரூபம் - லஷ்மி ரூபம், யந்த்ர ரூபம் மற்றும் சீதா ரூபம் என்று கோயில் பட்டர் சொன்னார்.

திருமங்கை மன்னன் பவளவண்ணரை (திருநெடுந்தாண்டகத்தில்) மங்களாசாசனம் செய்துள்ளார். பாசுரத்தில், பெருமாள் மேல் அவருக்கிருந்த பேரன்பும், பக்தியும் பிரவாகமாய் வெளிப்பட்டுள்ளன !
2060:
வங்கத்தால் மாமணிவந்து உந்து முந்நீர்-
மல்லையாய்.* மதிள்கச்சி ஊராய். பேராய்,*
கொங்கத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன்*
குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்,*
பங்கத்தாய். பாற்கடலாய். பாரின் மேலாய்.*
பனிவரையின் உச்சியாய். பவள வண்ணா,*
எங்குற்றாய் எம்பெருமான். உன்னை நாடி*
ஏழையேன் இங்கனமே உழிதருகேனே.

Photobucket - Video and ImageHosting
அடுத்து, காமாட்சி அம்மன் கோயிலுள் இருக்கும் திருக்கள்வனூர் ஆதிவராகப் பெருமாளை சேவித்தோம். அம்மன் சன்னதிக்கு வெளியே வலப்புறம் நின்ற திருக்கோலத்தில் பெருமாளும் தாயாரும்(அஞ்சிலைவல்லி) காட்சி தருகின்றனர். ஒரு முறை பார்வதியும் லஷ்மியும் பேசிக் கொண்டிருந்தபோது, பெருமாள் ஒட்டுக்கேட்பதை பார்வதி கண்டு, தன் அண்ணனான பெருமாளை 'கள்வா' என்று வாஞ்சையோடு கூப்பிட்டதால், கள்வர் என்றும் அறியப்படுகிறார். அன்று அம்மனைக் காண கூட்டம் அதிகம் என்பதால், பெருமாள் அருகில் அர்ச்சகர் யாரும் வரவில்லை !!! தை வெள்ளியன்று, லோகநாயகி காமாட்சியையும் தரிசிக்கும் பெரும்பாக்கியம் கிட்டியது. திருமங்கை இத்தலப்பெருமாளை ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார். பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள பாசுரத்தைப் (2059) பார்க்கவும்.

மணி பன்னிரெண்டை நெருங்கி விட்டதால், உலகளந்த பெருமாள் (திருஊரகம்) கோயிலுக்கு விரைந்தோம். இந்த திவ்யதேச வளாகத்துள் இன்னும் மூன்று திவ்யதேசப் (திருநீரகம், திருக்காரகம், திருக்கார்வனம்) பெருமாள்களும் அருள் பாலிக்கின்றனர். பெரிய மதிற்சுவர்களும், பழமையான ராஜகோபுரமும் கொண்ட கோயிலிது. பிரம்மாண்டமான மூலவர், த்ரிவிக்ரம அவதாரக் கோலத்தில், ஒரு காலை நிலத்தில் ஊன்றி, மற்றொரு காலை தூக்கி நிறுத்தி காட்சி தருகிறார். ஊன்றிய பாதத்தின் கீழ் மாபலியின் தலையைக் காணலாம். அருமையான சேவை ! தாயார் அம்ரிதவல்லி நாச்சியார். திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மங்களாசாசனம்.

திருமங்கையாழ்வார்
2064@
கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய். என்றும்*
காமரு பூங்கச்சி ஊரகத்தாய். என்றும்,*
வில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய். என்றும்*
வெ·காவில் துயிலமர்ந்த வேந்தே. என்றும்,*
மல்லடர்த்து மல்லரை அன்றுஅட்டாய். என்றும்,*
மாகீண்ட கைத்தலத்து என் மைந்தா. என்றும்,*
சொல்லெடுத்துத் தன்கிளியைச் சொல்லே என்று*
துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே. 13

திருமழிசையாழ்வார்
814@
நன்றிருந்து யோகநீதி* நண்ணுவார்கள் சிந்தையுள்,*
சென்றிருந்து தீவினைகள்* தீர்த்ததேவ தேவனே,*
குன்றிருந்த மாடநீடு* பாடகத்தும் ஊரகத்தும்,*
நின்றிருந்து வெ·கணை* கிடந்ததென்ன நீர்மையே? (63)

815@
நின்றது எந்தை ஊரகத்து* இருந்தது எந்தை பாடகத்து,*
அன்று வெ·கணைக் கிடந்தது* என்னிலாத முன்னெலாம்,*
அன்று நான் பிறந்திலேன்* பிறந்த பின் மறந்திலேன்,*
நின்றதும் இருந்ததும்* கிடந்ததும் என் நெஞ்சுளே. (64)

பெருமாளே ! நீ, ஊரகத்தில் நின்ற திருக்கோலத்திலும், பாடகத்தில் வீற்றிருந்த திருக்கோலத்திலும், திருவெ·காவில் சயன திருக்கோலத்திலும் ஊழிக்காலம் தொட்டு உள்ளாய் ! அப்போது நான் பிறக்கவில்லை, பிறந்த பின்னர் உன்னை நினைக்காத நாளில்லை ! அதனால், நீ, நிற்பதுவும், இருப்பதுவும், கிடப்பதுவும் என் நெஞ்சமே ஆகும்.

மூன்று சின்ன சன்னதிகளில் எழுந்தருளியிருக்கும் திருநீரக ஜகதீஸ்வரப் பெருமானையும், திருக்காரகக் கருணாகரப் பெருமாளையும், திருக்கார்வனக் கள்வர் பெருமாளையும் சேவித்தோம். திருமங்கை மூன்று பெருமாள்களையும் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார். பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள பாசுரத்தைப் (2059) பார்க்கவும்.

மணி பன்னிரெண்டரை ஆகி விட்டபடியால், மார்னிங் ஷோ இனிதே நிறைவடைந்தது :) முதல் ரவுண்டில் 8 திவ்யதேசங்களுக்கு செல்ல முடிந்தது ! கோயில்கள் மதியம் மூடப்படுவதால், மாலை 4 மணிக்கு மேல் தான் இரண்டாவது ரவுண்ட் ஆரம்பிக்க முடியும் ! அலைச்சலில் நல்ல பசி வேறு ! சரவணபவன் ஏசி அறையில் பிரமாதமான சாப்பாடு. அடுத்து சன்னதித் தெருவில் தெரிந்தவர் ஒருவர் வீட்டில் கொஞ்சம் ஓய்வெடுத்தோம், அடுத்த திவ்யதேச ரவுண்டை சுறுசுறுப்பாக ஆரம்பிக்க, அருமையான தேநீர் கிடைத்தது.

அடுத்த பதிவில் இரண்டாவது சுற்றைத் தொடர்கிறேன் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 304 ***

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails